குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்திய உக்ரைன்.. மேடையில் பாட்டு பாடிக் கொண்டிருந்த ரஷ்ய நடிகை பலி!

Su.tha Arivalagan
Nov 23, 2023,04:53 PM IST

மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் இடையிலான போரில் லேட்டஸ்டாக ஒரு நடிகை உயிரிழந்துள்ளார். இவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் ஆவார்.


அந்த நடிகையின் பெயர் பொலினா மென்ஷிக். 40 வயதான இவர் டான்பாஸ் பிராந்தியத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிக் கொண்டிருந்தார்.  ரஷ்ய ராணுவத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அது. அப்போது உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொலினா பரிதாபமாக உயிரிழந்தார்.


டான்பாஸ் பிராந்தியமானது உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமானது. ஆனால் தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் அது உள்ளது. இந்த நிலையில் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ராணுவத்தினரை மகிழ்விப்பதற்காக ஒரு நடன, இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில்தான் பொலினா கலந்து கொண்டிருந்தார்.




நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த கலாச்சார மையத்தைக் குறி வைத்து உக்ரைன் தனது ஹிமார்ஸ் ரக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.   இந்த சம்பவத்தில் பொலினா உள்பட 25 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல் நடந்தபோது பொலினா கிதாருடன் மேடையில் பாடிக் கொண்டிருந்தாராம்.


இந்த சம்பவம் குறித்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள போர்ட்டல் ஸ்டுடியோ நாடக மையம் இரங்கல் தெரிவித்துள்ளது. இங்குதான் முன்பு பொலினா பணியாற்றியுள்ளார். பொலினா முன்பு இயக்கி நடித்த நாடகம் ஒன்றை அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடத்தப் போவதாகவும் இந்த மையம் அறிவித்துள்ளது.