தமிழ்நாட்டின் 3வது துணை முதல்வர்.. உதயநிதிக்கு அடுத்தடுத்து உயர்வு... கொண்டாட்டத்தில் திமுக

Aadmika
Sep 29, 2024,04:39 PM IST

சென்னை : திமுக பதவியேற்ற நான்கு ஆண்டுகளில் உதயநிதி ஸ்டாலினுக்கு மிக குறுகிய காலத்திலேயே துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது திமுக தொண்டர்களிடையே எழுச்சியையும், இளம் தொண்டர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.


தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். முழு நேரமாக அரசியலுக்கு வந்து தான் களம் கண்ட முதல் தேர்தலிலேயே வெற்றியும் பெற்று எம்எல்ஏ., ஆனார். எம்எல்ஏ.,வாக அவர் மக்கள் மத்தியிலும், கட்சியிலும் ஆழமான இடத்தை பிடிப்பதற்கு முன்னரே அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.


அமைச்சர் பதவி வழங்கப்பட்ட சிறிது நாட்களிலேயே அவருக்கு புதிய திட்டங்களுக்கான கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டது. திமுக கட்சியை பொறுத்தவரை பழம்பெரும் கட்சி என்பதால் வயதான மூத்த உறுப்பினர்களே முக்கிய பொறுப்புகளில் அதிகம் இருந்து வருவதால் இளைஞர்களுக்கு திமுக.,வில் இடம் இல்லை என்ற பேச்சு இருந்து வந்தது. ஆனால் உதயநிதியின் வளர்ச்சி, அவருக்கு கொடுக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் ஆகியவை திமுக.,வில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.




இன்று மாலை சென்னையில் நடைபெற்ற திமுக பவள விழாவில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ், அப்போதும் இப்போதும் எப்போதும் திமுக ஆட்சி தான் என்றார். தற்போது பவள விழாவின் போது திமுக.,வின் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். அடுத்து திமுக.,வின் நூற்றாண்டு விழா நடைபெறும். ஆனால் அப்போது ஒரு ட்விஸ்ட், உதயநிதி ஸ்டாலின் அப்போது தமிழகத்தின் முதல்வராக இருப்பார் என்றார். அவர் சொன்னத உண்மை தான் என்பது போல, அந்த விழா முடிந்த சிறிது நேரத்திலேயே உதயநிதியை துணை முதல்வராக்க பரிந்துரைத்து தமிழக கவர்னருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நாளை துணை முதல்வராக பதவியேற்க உள்ளார் உதயநிதி ஸ்டாலின்.


ஏற்கனவே திமுக வட்டாரத்திலும் தற்போது துணை முதல்வர், 2026 சட்டசபை தேர்தலில் திமுக.,வின் முதல்வர் வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் தான் என பேசப்பட்டு வருகிறது. திமுக., வில் தற்போது உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் போன்ற இளம் வயதுடையவர்களுக்கும் அமைச்சர் போன்ற உயர் பதவி கொடுக்கப்பட்டு, முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதால் இனி வரும் காலங்களில் திமுக.,வில் இளைஞர்கள் பலரும் முக்கிய பொறுப்புக்களுக்கு வர முடியும் என்ற நம்பிக்கை கட்சி தொண்டர்களிடம் வந்துள்ளது. இது வரும் சட்டசபை தேர்தலில் திமுக.,விற்கு இளைஞர்களின் ஆதரவு அதிகரிக்கவும், புதிய பலத்தை கொடுக்கவும் வாய்ப்புள்ளது.


மூன்றாவது துணை முதல்வர் 


தமிழ்நாட்டில் இதற்கு முன்பு மு க ஸ்டாலின் துணை முதல்வராக இருந்துள்ளார். அதை தொடர்ந்து அதிமுக ஆட்சி காலத்தில் ஓ பன்னீர்செல்வம் துணை முதல்வராக இருந்துள்ளார். இந்த வரிசையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளார். திமுக அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளில் அதிகபட்சமாக திமுகவிலிருந்து இரண்டாவது தலைவராக துணை முதல்வர் பதவியை ஏற்க உள்ளார் உதயநிதி ஸ்டாலின்.


உதயநிதி ஸ்டாலினை மூன்றாவது கலைஞர் என்று திமுகவினர் செல்லமாக அழைக்கிறார்கள். அப்படிப்பட்ட மூன்றாவது கலைஞராக திமுகவினரால் பார்க்கப்படும் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் மூன்றாவது துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்