உதயநிதி பேட்டியால் இ-ந்-தி-யா கூட்டணிக்குள் வந்த குழப்பம்...மெளனம் கலைத்த காங்கிரஸ், மம்தா

Aadmika
Sep 05, 2023,02:48 PM IST
டில்லி : சனாதன தர்மம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்தால் எதிர்க்கட்சிகளின் இ-ந்-தி-யா கூட்டணியே ஆடிப் போய் உள்ளது. ஒரு வழியாக இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து மம்தா பானர்ஜியும் மெளனம் கலைந்து, கருத்து தெரித்துள்ளார்.

6 மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இன்று தேர்தல் நடந்து வருகிறது. இ-ந்-தி-யா கூட்டணிக்கு மக்களின் ஆதரவு எந்த அளவிற்கு உள்ளது என்பதை காட்டும் தேர்தலாக இது பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில் சனாதன தர்மம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பலரும் கொந்தளித்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



இந்த ஒரே பேட்டியால் உதயநிதி நாடு முழுவதும் பிரபலமான அரசியலாவதியாக பேசப்பட்டு வருகிறார். அதே சமயம் இந்த பேச்சு பாஜக.,எதிர்ப்பாக இருந்தாலும், இ-ந்-தி-யா கூட்டணிக்கு வரும் இந்துக்களின் ஓட்டை காலி செய்து விடுமோ என்ற அச்சம் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சி என்பதால் பகிரங்கமாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் மற்ற கட்சிகள் தயங்கி வருகின்றன.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், குறிப்பிட்ட மக்களை காயப்படுத்தும் எந்த விவகாரத்திலும் நாங்கள் தலையிட விரும்பவில்லை. உதயநிதி பேசி உள்ளதை ஒரு ஜூனியர் பேசியதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்த வரை எதற்காக, என்ன சூழலில் அவர் அந்த கருத்தை தெரிவித்தார் என்பது தெளிவாக தெரியவில்லை. ஒவ்வொரு மதமும், ஒவ்வொருவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்றே நான் நினைக்கிறேன் என்றார். 

மேலும், தமிழகம் மற்றும் தென்னிந்திய மக்களை நான் மதிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு மதத்திற்கும் தனியான நம்பிக்கைகள், உணர்வுகள் உள்ளது. அதை அனைவரும் மதிக்க வேண்டும். நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன். நாடு முழுவதும் ஏராளமான கோவில்கள் உள்ளன. நாம் அங்கும் செல்கிறோம். மசூதிகள், தேவாலயங்களுக்கும் செல்கிறோம். அனைவரின் நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.