மோடி பஞ்சாயத்தே ஓயாத நிலையில்.. சாவர்க்கரால் ராகுலுக்கு வந்த புதுப் பிரச்சினை!

sahana
Mar 28, 2023,02:10 PM IST
மும்பை: மோடி பெயரை திருடர்களுடன் ஒப்பிட்டு பேசியதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் ராகுல், இதனால் தனது எம்.பி., பதவியை இழந்த நிலையில், அடிக்கடி அவர் மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை என பேசி வருவதால், தங்களுடைய கூட்டணி கட்சி தலைவர்களுள் ஒருவரான உத்தவ் தாக்கரே ராகுலுக்கு எதிராக திரும்பியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு லோக்சபா தொகுதி எம்.பி.,யாகவும் இருந்த ராகுல் காந்தி, கடந்த சில மாதங்களாக பா.ஜ.க.,வை கடுமையாக எதிர்த்து வருகிறார். லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து குரல் எழுப்பி வந்தார். அதிலும் பா.ஜ.,வினர் போற்றும் தலைவர்களுள் ஒருவரான சாவர்க்கரை பற்றியும் அவ்வபோது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இது பா.ஜ.க.,வினருக்கு புகைச்சலை ஏற்படுத்தி வருகிறது.



இந்த நிலையில் சமீபத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது லோக்சபாவில், தொழிலதிபர் கவுதம் அதானிக்காக பல விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு என பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து பேசினார். இதற்கு பா.ஜ.க எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன்பிறகு லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, நாட்டை இழிவுப்படுத்தி பேசிவிட்டதாக பா.ஜ.க தரப்பில் குற்றச்சாட்டை முன்வைத்து, அதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, பார்லிமென்டின் இரு அவைகளையும் முடக்கி வருகின்றனர். ஆனால், ராகுல் காந்தியோ, ‛மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை’ எனக் கூறினார்.

இது ஒருபுறம் இருக்க பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல், மோடி என்னும் சமூகத்தை திருடர்களுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ராகுலை குற்றவாளி என அறிவித்த குஜராத்தின் சூரத் நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இதனால் அவரை எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக லோக்சபா செயலாளர் அறிவித்தார். இதனையடுத்து ராகுலுக்கு, பல அரசியல் தலைவர்களும் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.

அதில் முக்கியமாக மஹாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்தார். ராகுலுக்கு ஆதரவு கொடுத்தாலும், ஒரு விஷயத்தில் ராகுலுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார் உத்தவ் தாக்கரே. அதாவது, அடிக்கடி சாவர்க்கர் பெயரை குறிப்பிட்டு பேசுவது குறித்து தனது நிலைபாடையும் தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே கூறுகையில், ‛‛எங்களின் கடவுள்தான் சாவர்க்கர். அவரை இழிவுபடுத்தி பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும். சாவர்க்கரை இழிவுபடுத்துவதை எல்லாம் சகித்துக் கொண்டிருக்க முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே நாங்கள் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். ஆனால் ராகுல் காந்தி எங்களை சீண்டும் வகையில் பேசி இருக்கிறார்’’ என ஆவேசப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைத்த உத்தவ் தாக்கரே, இப்போது சாவர்க்கர் பெயரால் ராகுலுக்கு எதிராகவும் திரும்பியுள்ளார். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள சூழலில் பா.ஜ.க.,வை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முற்பட்டு வரும் நிலையில், சாவர்க்கர் பெயரால் கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.