தலைக்கு விலை வைத்த சாமியார்.. கருணாநிதி ஸ்டைலில்.. உதயநிதி நையாண்டி!

Meenakshi
Sep 05, 2023,12:12 PM IST
சென்னை: தனது தலைக்கு உ.பி. சாமியார் விலை வைத்துப் பேசியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தாத்தா கருணாநிதி ஸ்டைலில் நையாண்டியாக பதிலடி கொடுத்துள்ளார்.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. உதயநிதியின் பேச்சை நாடு முழுவதும் விவகாரமாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவுபவர்களுக்கு 10 கோடி வழங்குவதாக அறிவித்ததோடு, உதயநிதி ஸ்டாலினின் உருவப்படத்தை வாளால் கிழித்து தீயிட்டு எரித்தும் உள்ளார். 

இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில் சாமியாரின் பேச்சிற்கு  நக்கலாக பதிலடி கொடுக்கும் விதமாக, என் தலைக்கு எதுக்கு 10 கோடி. ஒரு சீப்பு தந்தால் நானே என் தலையை சீவிக் கொள்வேன் என்று பதில் அளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

மேலும் நான் தலைவர் கருணாநிதியின் வழியில் வந்தவன் நான். அவரது பேரன் நான். இந்த மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன் என்றும் பதில் அளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி தொடர்ந்து தைரியமாகவும், வழக்குகள் வந்தால் சமாளிப்பேன் என்றும் பேசி வருவதால் அவருக்கு ஆதரவாக திமுகவினர் சமூக வலைதளங்களில் கருத்துக்களைக் குவித்து வருகின்றனர். மறுபக்கம் பாஜக உள்ளிட்ட  இந்து அமைப்புகள் உதயநிதிக்கு எதிராக பேசி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் அனல் பறக்கிறது.