அதெல்லாம் என்ன பேச்சு.. போலிச் சாமியாரா இருக்கும்.. அண்ணாமலை அட்டாக்!

Meenakshi
Sep 12, 2023,12:08 PM IST

மதுரை: தலையை வெட்டுவேன்னு பேசுறதெல்லாம் என்ன பேச்சுண்ணே.. அதெல்லாம் தப்பு.. அவரு போலிச் சாமியாரா இருப்பாரு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைத்த அயோத்தி சாமியாரைக் கண்டித்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.


மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,  எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சனாதனத்தை எதிர்ப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் அப்படி பேசினால் நல்லதுதான். அப்போதுதான் பாஜக வளரும். திமுகவின் குடும்ப அரசியல், ஒவ்வொரு நாளும் நிரூபணமாகி கொண்டிருக்கிறது. தகுதி இல்லாதவர்கள், திறமை இல்லாதவர்கள் குடும்ப அரசியல் மூலம் அமைச்சர்கள் ஆகிறார்கள்.




உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு பரிசுத்தொகை அறிவித்தது தவறு. அதெல்லாம் தப்பான பேச்சு. ஒருவரின் தலைக்கு விலை வைப்பேன் என்றால் அவர் ஒரு போலி சாமியாராக தான் இருக்கமுடியும். உண்மையான சனாதனம் பற்றி அவருக்கு தெரியாமல் இருக்கும். ஒருவரின் உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தலைக்கு விலை வைப்பதற்கு யார் அவர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


இந்தியாவின் பெயரை, பாரத் என்று மாற்றப்படுவதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது. அரசியலமைப்பு அறிஞர்கள் கூட இந்தியாவை பாரத் என்றும், பாரத் என்பதை இந்தியா என்றும் உபயோகிப்பதால் எந்தவித சட்ட சிக்கலும் ஏற்படாது என்று சொல்கிறார்கள். இந்தியாவை பாரத் என்று ஒரு சில இடங்களில் பிரதமர் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தியுள்ளார். எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை இந்தியா என்ற பெயரை வைத்ததனால் தான், பாரத் என பெயர் மாற்றுவதாக நினைக்கிறார்கள், அதெல்லாம் தவறான பேச்சு என்றார் அண்ணாமலை.