பெரியப்பாவைப் பார்க்க வந்த.. தம்பி மகன் உதயநிதி.. மதுரையில் நெகிழ்ச்சி!

Su.tha Arivalagan
Jan 17, 2023,09:23 AM IST
மதுரை: மதுரைக்கு வந்திருந்த திமுக இளைஞர் அணித் தலைவரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தனது பெரியப்பாவும், முன்னாள்  மத்தியஅமைச்சருமான மு.க.அழகிரியை நேரில் சந்தித்துப் பேசினார்.



மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி காலத்தில் மதுரையில் மிகப் பெரிய திமுக தலைவராக விளங்கியவர் அழகிரி. தென் மண்டல திமுக அமைப்பாளராக திகழ்ந்த அவர் தென் மாவட்டங்களில் திமுகவை வலுவுடன் வைத்திருக்க உறுதுணையாக இருந்தார். தென் மாவட்டங்களில் திமுக அசைக்க முடியாத சக்தியாக திகழ அழகிரியும் ஒரு காரணம்.

மத்திய அமைச்சராகவும் வலம் வந்தவர் அழகிரி. பின்னர் திமுக தலைமையுடனும், மு.க.ஸ்டாலினுடனும் ஏற்பட்ட மனகச்சப்பால் கருணாநிதியின் அன்பை இழந்தார். கட்சியை விட்டும் நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் சில காலம் வரை தீவிரமாக செயல்பட்டு வந்த அவர் பின்னர் அமைதியாகி விட்டார். தற்போது தீவிர அரசியலில் அவர் இல்லை.

இடையில் அவர் மீண்டும் திமுகவில் சேரப் போவதாக தகவல்கள் வந்தன. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில்தான் அவரை உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளார். அலங்காநல்லூரில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் அழைக்கப்பட்டுள்ளார். இதற்காக நேற்றே மதுரைக்கு வந்து விட்டார் உதயநிதி ஸ்டாலின்.

மதுரை  வந்த அவர் டிவிஎஸ் நகரில் உள்ள மு.க.அழகிரி வீட்டுக்கு சென்றார். உதயநிதி ஸ்டாலின்  வரும் தகவல் கிடைத்ததும், மு.க. அழகிரி தனது மனைவியுடன் வீட்டுக்கு முன்பே காத்திருந்தார். உதயநிதி ஸ்டாலின் வந்ததும் நேராக தனது பெரியப்பாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்ட அழகிரி, மஞ்சள் சால்வையை தனது மகனுக்கு அணிவித்தார். பதிலுக்கு உதயநிதியும் அழகிரிக்கு சால்வை அணிவித்தார்.

அப்போது அருகில் புன்னகையுடன் உதயநிதியைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியம்மா காந்தி, உதயநிதி அருகில் வந்து அவரது தலையைப் பிடித்து நெற்றியில் பாசத்துடன் முத்தமிட்டார். இதையடுத்து பெரியம்மா காலிலும் விழுந்து ஆசி பெற்றார் உதயநிதி ஸ்டாலின். அந்த சந்திப்பு மிகவும் நெகிழ்ச்சியாகவும், உருக்கமாகவும் இருந்தது.

உதயநிதியுடன் அவரது நண்பரும், அமைச்சருமான அன்பில் மகேஷும் வந்திருந்தார்.  அவரையும் அழகிரி, கட்டிப்பிடித்துக் கொண்டு அணைத்தபடியே வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

உதயநிதி வருகை குறித்து செய்தியாளர்கள் அழகிரியிடம் கேட்டபோது, பெரியப்பாவைப் பார்க்க தம்பி மகன் வருகிறார் என்று சிரித்துக் கொண்டே கூறினார் அழகிரி.  திமுகவில் மீண்டும் இணைவீர்களா என்ற கேள்விக்கு அவர்கள்தான் ( திமுக தலைமை) முடிவு செய்ய வேண்டும் என்றார் அழகிரி.

தனக்கு பெரியப்பாவை மிகவும் பிடிக்கும் என்றும், அவருக்கும் என் மீது பாசம் அதிகம் என்றும் பல பேட்டிகளில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.. உதயநிதியின் வருகை, மு.க.அழகிரியை மீண்டும் திமுகவுக்குக் கூட்டி வருமா என்பது போகப் போகத் தெரியும்.