சேலையை வரிந்து கட்டிக் கொண்டு ஜிம்மில் உடற்பயிற்சி.. கலக்கும் பெண்கள்!

Su.tha Arivalagan
Jan 10, 2023,09:22 AM IST
சென்னை: சேலையை வரிந்து கட்டிக் கொண்டு அசத்தலாக உடற்பயிற்சி செய்யும் பெண்கள் குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.

இதில் ஒரு பெண்மணி சென்னையைச் சேர்ந்தவர். இன்னொருவர் வட இந்தியாவைச் சேர்ந்தவர். இருவருமே தங்களது உடல் வலிமையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

சேலை கட்டிக் கொள்வது பார்க்க லட்சணமாக இருப்பதாக தோன்றினாலும், பெண்களுக்கு அது மிக மிக அசவுகரியமான உடை என்பதை பெண்களே ஒப்புக் கொள்வார்கள். ஈஸியாக எதையும் செய்ய முடியாது. ஆனால் அப்படிப்பட்ட  சேலையைக் கட்டிக் கொண்டு இரண்டு பெண்மணிகள் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து அசத்தியுள்ளனர்.

முதலில் சென்னைக்கார பெண்மணியைப் பற்றிப் பார்ப்போம்...




சென்னை தாம்பரத்தில் மெட்ராஸ் பார்பெல் என்ற உடற்பயிற்சிக் கூடம் உள்ளது. இந்த ஜிம் உரிமையாளரின் தாயார்தான் இந்த பெண்மணி. 56 வயதாகும் இவர் தனது மகனின் ஜிம்முக்கு அவ்வப்போது வந்து பார்த்து அங்கு பெண்கள் சூப்பராக உடற்பயிற்சி செய்வதைப் பார்த்து வியந்து தானும் அதைச் செய்ய விருப்பம் தெரிவித்தார்.

பின்னர் மகனின் மேற்பார்வையில் மெல்லமெல்ல கற்றுக் கொண்ட அவர் வேகமாக அதில் தேறினார். பளு தூக்கும் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு தற்போது சூப்பராக செய்கிறார்.  தினசரி ஜிம்முக்கு வந்து உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். எல்லாமே சேலையில்தான்.  இதுதொடர்பான வீடியோ ஒன்றை மெட்ராஸ் பார்பெல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளது.

சேலையிலேயே உடற்பயிற்சி செய்யும் அவர் சர்வசாதாரணாக டம்பள்ஸை தூக்குகிறார். வெயிட் லிப்டிங் பண்ணுங்கிறார்.  இவரது மருமகளுடனும் சேர்ந்தும் உடற்பயிற்சி செய்கிறார்.  அந்த வீடியோவில், நானும் எனது மருமகளும் இணைந்து உடற்பயிற்சி செய்கிறோம். நீங்களும் உங்களுக்கு விரும்பியதை செய்யுங்கள். சேலையிலேயே கூட உடற்பயிற்சி செய்யலாம்.  முதன் முறையாக நான் ஜிம்முக்கு வந்தபோது எனக்கு வயது  52. உடற்பயிற்சி  செய்ய ஆரம்பித்ததும் எனக்கு கால் வலியும், முட்டி வலியும் போய் விட்டது. எனது மகனின் ஆலோசனைப்படியே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். இப்போது வலியில்லாமல் இருக்கிறேன். ஒரு குடும்பமாக நாங்கள் ஆரோக்கியமாக, பிட்டாக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

இதேபோல வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் சேலையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவும் வைரலாகியுள்ளது. 



அவரது பெயர் ரீனா சிங். இவர் தனது ஜிம்மில் சேலையில் படு லாவகமாக உடற்பயிற்சி செய்கிறார். இவர் ஒரு பிட்னஸ் டிரெய்னர் ஆவார். கஷ்டமான  உடற்பயிற்சிகளைக் கூட படு கேஷுவலாக இவர் செய்கிறார். சேலை ஒரு போதும் இவரது பயிற்சிக்கு இடையூறாகவே இல்லை. லாவகமாக எல்லாவற்றையும் இவர் செய்கிறார்.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட வீடியோக்கள் போட்டுள்ளார். பலவற்றில் சேலையில்தான் உடற்பயிற்சி செய்வது போல உள்ளது. பலரும் இவருக்குப் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்.

ஒரு வேலையைச் செய்வது என்று முடிவெடுத்து விட்டால் எதுவும் நம்மை நிறுத்த முடியாது என்பதற்கு இந்த இரு பெண்மணிகளும் நல்ல உதாரணங்கள்..!