அக்கா, தங்கை இருவரும் சேர்ந்து.. மகனை கொன்ற கொடூரம்.. ஏன் என்னாச்சு.. பின்னணி என்ன..?

Manjula Devi
May 07, 2024,05:07 PM IST

திருவண்ணாமலை: 35 வயதாகியும் தனக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் அம்மாவிடம் தகறாறு செய்த, சுரேஷ் என்பவரை தாய் மற்றும் பெரியம்மா ஆகியோர் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் உள்ள தென்னாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவர் அக்கா தங்கையான ருக்மணி மற்றும் முனியம்மாள் இருவரையும் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் தலா மூன்று மகன்கள் உள்ளனர். இதில் ருக்மணி தனது மூன்று மகன்களில் இரண்டு மகன்களுக்கு திருமணம் செய்து வைத்து, அவர்கள் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். 35 வயதான சுரேஷ் என்ற மூன்றாவது மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் ஒரு தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.


கடந்த சில வருடங்களுக்கு முன்பு முனியம்மாளின் கணவர் தெய்வசிகாமணி இறந்தார். இதனால் சென்னையில் உள்ள தனது மகன் வீட்டில் வசித்து வந்தார் முனியம்மாள். திருமணம் ஆகாத மகன் சுரேஷ் வேலை செய்து வீட்டிற்கு பணம் தராமல் பணத்தை முழுவதும் குடித்துக் விட்டு ஊதாரித்தனமாக செலவழித்து வந்துள்ளார். இந்த நிலையில், தாய் ருக்மணியிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தகராறு செய்தாக கூறப்படுகிறது.




சென்னையில் மகன் வீட்டில் இருந்த முனியம்மா தன்னுடைய கணவர் ஊரான தென்னாங்கூர் கிராமத்திற்கு நேற்று வந்தடைந்தார். இதற்கிடையே சுரேஷ் ருக்மணியிடம் எனக்கு குடிக்க காசு வேண்டும் என தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார். அப்போது எவ்வளவு சொல்லியும்  கேட்காததால் ஆத்திரத்தில் முனியம்மா கொதிக்கும் எண்ணையை சுரேஷ் தலையில் ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பணம் கேட்டு ருக்மணி மற்றும் முனியம்மாள் இருவரையும் தொந்தரவு கொடுத்ததால், பொறுமை இழந்த இருவரும் சுரேஷை கட்டையால் அடித்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில், வலியால் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


தகவல் அறிந்த வந்தவாசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ருக்மணி மற்றும் முனியம்மாள் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கொலைக்கான காரணத்தை தெரிந்து கொண்ட போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த விரக்தியால் தகராறு செய்த மகனை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.