திருவள்ளூர் அருகே .. தண்டவாளத்தைக் கடந்தபோது.. மின்சார ரயில் மோதி 3 பேர் பலி!

Su.tha Arivalagan
Nov 19, 2023,12:27 PM IST
சென்னை: திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு ரயில் நிலையப் பகுதியில் தண்டவாளத்தைக் கடந்த 3 பேர் மின்சார ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

கொல்லப்பட்ட 3 பேரில் 2 பேர் பெண்கள் ஆவர். வேப்பம்பட்டு ரயில் நிலையப் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்வோர் அதிகம். பலமுறை இப்பகுதியில் விபத்து ஏற்பட்டும் கூட மக்கள் அதை கண்டு கொள்வதே இல்லை. உயிரைப் பணயம் வைத்து பலரும் தண்டவாளத்தைக் கடப்பது வாடிக்கையாக உள்ளது.

இந்த அவலத்தைப் போக்குவதற்காக ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றது. ஆனால் தற்போது அது பாதியிலேயே நிற்கிறது. இதனால் மக்களின் அவலமும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் பகுதியில் இன்று ஒரு விபரீதம் நடந்துள்ளது.




இன்று காலை சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் வேப்பம்பட்டு ரயில் நிலையப் பகுதியை கடந்தபோது 3 பேர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் 2 பேர் பெண்கள் ஆவர். 3 பேரின் உடல்களும் மிக மோசமாக சிதறிப் போய் விட்டன. அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் சிதிலமடைந்து விட்டன.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் உடல் பாகங்களைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரயில் மோதி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.