என்னங்க சொல்றீங்க.. இந்த அறிகுறி இருந்தா கொரோனாவா?

Aadmika
Jan 04, 2024,07:21 PM IST

டில்லி : நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 வைரசின் இரண்டு புதிய அறிகுறிகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை விட இந்த புதிய அறிகுறிகள் தான் அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.


கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனாவின் மற்றொரு வகையான ஜேஎன் 1 வகை வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 5 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 2 பேரும், கர்நாடகா, தமிழகம் மற்றும் பஞ்சாப்பில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர். 




இதற்கு முன்பு பரவிய கொரோனா வகைகளில் மூக்கில் நீர் வடிதல், காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, மணம், சுவை எதுவும் தெரியாமல் இருப்பது ஆகியவை தான் அறிகுறிகளாக சொல்லப்பட்டன. இந்நிலையில் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில் புதிதாக இரண்டு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. 


புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரவில் தூக்கம் இன்றி சிரமப்படுவார்கள் என்றும், அதிகமாக கவலைப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த அறிகுறிகள் மற்ற வகைகள் கொரோனாவிற்கும் இருந்தது தெரிய வந்துள்ளது.


ஜேஎன் 1 வகை கொரோனா வந்தது முதலே பல்வேறு தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன. இது வேகமாகப் பரவக் கூடியது என்றாலும் கூட உயிர் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பது சற்று ஆறுதலானது. எப்படி இருந்தாலும் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. கொரோனாவுடன் வாழப் பழகி நாம் சில வருடங்களாகி விட்டாலும் கூட எப்போதும் சற்று ஜாக்கிரதையாக முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லதுதானே!