"ஜீப் மீது மோதிய கார்.. எஸ்.ஐக்கு வெட்டு"..  2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை!

Su.tha Arivalagan
Aug 01, 2023,09:39 AM IST

சென்னை: சென்னை அருகே ஊரப்பாக்கம் பகுதியில் இன்று அதிகாலையில் 2 ரவுடிகளை போலீஸார் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். போலீஸாரைத் தாக்கியதால் பதிலுக்கு அவர்களை போலீஸார் சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கூடுவாஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது,  
அப்போது அதி வேகமாக வந்த கருப்பு நிற SKODA காரை நிறுத்த முற்பட்ட போது காரை நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து காவல்துறை வாகனத்தின் மீது மோதி அந்த கார் நின்றது.





உடனே போலீசார் அந்த கார் அருகில் சென்ற போது அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலிசாரை நோக்கி தாக்க முற்பட்டனர்.  அதில் ஒருவர் அரிவாளால் உதவி ஆய்வாளரின் இடது கையில் வெட்டிவிட்டு மீண்டும் தலையில் வெட்ட முயற்சி செய்த போது உதவி ஆய்வாளர் கீழே குனிந்ததால் அவரது தொப்பியில் வெட்டியுள்ளனர். 

இதை பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும் உதவி ஆய்வாளர் ஒரு நபரையும் சுட்டனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடினார்கள். மேற்படி காயம்பட்ட இருவரைப் பற்றி  போலீஸார் விசாரித்தபோது, அதில் ஒருவர் பெயர் வினோத் என்கிற சோட்டா வினோத், 35 வயது என்றும் ஓட்டேரி காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி எனவும், அவர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதில் 10 கொலை, 15 கொலை முயற்சி. 10 கூட்டுக்கொள்ளை, 15 அடிதடி, மற்றும் மிரட்டி பணம் பறித்தல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.



மற்றொரு நபர்  ரமேஸ், வயது 32. அவரும் ஓட்டேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிறுவையில் உள்ளதாகவும் அதில் 5 கொலை, 7 கொலை முயற்சி,  அடிதடி மற்றும் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. 

ரவுடிகள் தாக்கியதில் காயம் பட்ட உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காயம்பட்ட எதிரிகளை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது எதிரிகள் இருவரும் வரும் வழியிலேயே இறந்து  விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.