புடினைக் கொல்ல.. கிரம்ளின் மாளிகையை குறி வைத்த டிரோன்கள்.. சுட்டு வீழ்த்தியது ராணுவம்

Su.tha Arivalagan
May 04, 2023,10:09 AM IST

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினை கொல்லும் நோக்குடன் ஏவப்பட்ட 2 டிரோன்களை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. புடினைக் கொல்ல உக்ரைன் முயற்சித்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.


இந்த சம்பவத்தில் புடினுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அதேபோல கிரம்ளின் கட்டடத்துக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக கிரம்ளின் மாளிகையை நோக்கி 2 டிரோன்கள் பறந்து வந்தன. இதையடுத்து அந்த இரண்டு டிரோன்களையும் ரஷ்ய ஏவுகணைகள் வழிமறித்துத் தாக்கி அழித்து விட்டன. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புடினைக் கொல்ல உக்ரைன் முயற்சித்ததாகவும், இதற்கு சரியான  பதிலடி கொடுக்கப்படும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.  இதனால் கடந்த  ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வரும் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் மேலும் மோசமடையும் அபாயம் எழுந்துள்ளது.


டிரோன் தாக்குதலின்போது கிரம்ளின் மாளிகையில் புடின் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று உக்ரைன் மறுத்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் அதிபரின் செய்தித் தொடர்பாளர் மிக்கைலோ போடோலியாக் கூறுகையில், இதற்கும் உக்ரைனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கிரம்ளின் மாளிகையை உக்ரைன் ஒருபோதும் தாக்காது. இப்படிப்பட்ட தாக்குதல்கள் எந்த வகையிலும் உதவாது என்று உக்ரைன் நம்புகிறது என்றார் அவர்..


கிரம்ளின் மாளிகையை நோக்கி வந்த இரண்டு டிரோன்களில் ஒன்று அதிபர் மாளிகை கோபுரம் மீது பறந்து வந்தது குறிப்பிடத்தக்கது.