Y பிரிவு பாதுகாப்பு.. த.வெ.க.தலைவர் விஜய்.. இன்று முதல் மத்திய படை பாதுகாப்பு வளையத்தில்!

Meenakshi
Mar 14, 2025,03:10 PM IST

 சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவருமான 'Y' பிரிவு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அந்தப் பாதுகாப்பின் கீழ் விஜய் வருகிறாராம்.


நாட்டில் உள்ள முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் என பல்வேறு துறைகளில் முக்கிய பிரமுகர்கள் ஆக இருப்பவர்களுக்கு, அவர்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம்.  அதன்படி இஜட் பிளஸ், இஜட் ஒய் ப்ளஸ், ஒய், எக்ஸ் என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது. அந்த வகையில் விஜய்க்கு இன்று முதல் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்பட்டுள்ளது. 


கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார் விஜய். தற்போது  ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வரும் விஜய், இந்தப் படத்தை நடித்து முடித்த பிறகு 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முழு அரசியல்வாதியாக களம் காண இருக்கிறார். 




இது ஒருபுறம் இருக்க, மற்றொரு பக்கம் தவெக கட்சியின் வளர்ச்சிப் பணிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்து வருகிறார். அதே சமயத்தில் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் அக்கட்சியின் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தினார் தவெக தலைவர் விஜய். 


அதே சமயத்தில் தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளை 120 மாவட்டங்களாக பிரித்து, ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு மாவட்ட நிர்வாகிகள் வீதம் நியமிக்க, கட்சித் தலைவர் விஜய் திட்டமிட்டு அதன்படி தற்போது மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை, 95 மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மாவட்ட செயலாளர்களுக்கான இறுதிப்பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய். 


இந்நிலையில்,  விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பா தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கட்சியினரை மட்டுமல்லாமல், பொதுமக்களிடமும் அதி வேகமாக ரீச் ஆக முடியும் என்பது விஜய் தரப்பின் நம்பிக்கை.  சமீபத்தில் நடந்த அக்கட்சி மாநாடு, பரந்தூர் விமான நிலைய விவகாரம் போன்றவற்றில் விஜய் நேரடியாக சென்று மக்களை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதனை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்க்கு பாதுகாப்பு வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதில் இரண்டு அல்லது மூன்று துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என மொத்தம் எட்டு முதல் 11 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இரண்டு கான்வே வாகனம் விஜய்யின் வாகனத்திற்கு முன்னும் பின்னும் பயன்படுத்தப்படும்.  சுழற்சி முறையில் 24 மணி நேரமும் விஜயின் வீடு, மற்றும் கட்சி அலுவலகம் அவர் செல்லும் இடம் என  கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்க இருக்கின்றனர்.


கடந்த ஆண்டு விஜய் தரப்பில் இருந்து பாதுகாப்பு கேட்டு மத்திய அரசிற்கு கடிதம் அளிக்கப்பட்டதாகவும், அதன் பேரிலேயே விஜய்க்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.