தவெக தலைவர் விஜய்க்கு.. ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்க.. மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டில் முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சியில் செல்வாக்கு மிக்கவர்கள், திரைத்துறையினர், என பல்வேறு துறைகளில் முக்கிய பிரமுகர்கள் ஆக இருப்பவர்களுக்கு, அவர்களது பாதுகாப்பு முக்கியத்துவத்தின் அடிப்படையில் பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். அவர்களுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு வழங்குவது வழக்கம். அதன்படி இஜட் பிளஸ், இஜட் ஒய் ப்ளஸ், ஒய், எக்ஸ் என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது.
அந்த வகையில் தற்போது விஜய்க்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை நடித்து முடித்த பிறகு 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முழு அரசியல்வாதியாக களம் காண இருக்கிறார். மறுபக்கம் கட்சி குறித்த செயல்பாடுகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார் விஜய்.
கட்சியின் மேல்மட்டம் முதல் கீழ் மட்டம் வரை ஒவ்வொருவரும் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அதே சமயத்தில் கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் அக்கட்சியின் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.
அதன்படி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகிய மூவரும் ஆண்டுவிழா மற்றும் பொது குழு கூட்டத்தை நடத்த இடம் தேர்வு செய்யும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது மாமல்லபுரம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.
அதே சமயத்தில் விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பா தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இதைத்தான் விஜய் கட்சியினரும் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் கட்சியினரை மட்டுமல்லாமல், பொதுமக்களிடமும் அதி வேகமாக ரீச் ஆக முடியும் என்பது விஜய் தரப்பின் நம்பிக்கை. சமீபத்தில் நடந்த அக்கட்சி மாநாடு, பரந்தூர் விமான நிலைய விவகாரம் போன்றவற்றில் விஜய் நேரடியாக சென்று மக்களை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் சமீபத்தில் ரஜினி ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் விஜய் போகும் இடமெல்லாம் முட்டைகளை வீசி அவரை தாக்க முயற்சிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஸ்பேஸ் உரையாடல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்க்கு பாதுகாப்பு வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதில் இரண்டு அல்லது மூன்று துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என மொத்தம் எட்டு முதல் 11 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
இரண்டு கான்வே வாகனம் விஜயின் வாகனத்திற்கு முன்னும் பின்னும் பயன்படுத்தப்படும். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் விஜயின் வீடு, மற்றும் கட்சி அலுவலகம் அவர் செல்லும் இடம் என கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிக்க இருக்கின்றனர்.