யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
சென்னை : தன்னை பனையூர் பண்ணையார் என விமர்சித்து வரும் அரசியல் கட்சிகளுக்கு, தனது கட்சியின் ஆண்டுவிழாவில் சூப்பராக பதிலடி கொடுத்துள்ளார் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய். விஜய்யின் பேச்சு மீண்டும் டிரெண்டாக பேசப்பட்டு வருகிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்று செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டார். இதில் விஜய் என்ன பேச போகிறார் என்பது தான் அனைவரும் எதிர்பார்ப்பாக இருந்தது. கட்சியின் முதல் மாநாட்டில் பேசியது போல் நிறைய பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிக சுருக்கமாக பேசி விட்டார் விஜய்.
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்திய விஜய், எதிர்க்கட்சிகள் தன்னை பற்றி கூறிய விமர்சனங்களும் சிம்பிளாக பதிலளித்து தன்னுடைய பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் பாஜக, திமுக இரு கட்சிகளும் பேசி வைத்துக் கொண்டு, மக்களை ஏமாற்றுவதாக விஜய் தெரிவித்துள்ளார். அதோடு, மும்மொழிக் கொள்கையை தங்களின் கட்சி எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
யாரு பண்ணையார்.. விஜய் கொடுத்த பதிலடி!
விஜய்யை பனையூர் பண்ணையார் என திமுகவினர் மற்றும் திமுக ஆதரவாளர்கள் விமர்சித்து வந்ததற்கு பதிலளித்த விஜய், " தவெக கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தனர்கள் என ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இது சாமானியர்களுக்கான கட்சி என்பதால் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் இதில் இருப்பார்கள். இது ஒன்றும் பண்ணையார்கள் கட்சி கிடையாது. முன்பெல்லாம் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். ஆனால் இப்போது பதவிக்கு வந்த உடனேயே அனைவரும் பண்ணையார் ஆகி விடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு சாதாரண கட்சிகள் பதவிக்கு வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை" என தன் மீதான விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் பக்கமே திருப்பி விட்டுள்ளார்.
விஜய்யின் இன்றைய பேச்சில் பல இடங்களில் எதையோ சொல்ல வந்து, பிறகு வேண்டாம் என தவிர்த்து பேசியது நன்றாகவே தெரிந்தது. திமுக, பாஜக., வை தான் விமர்சிக்கவோ, அவர்கள் பற்றி குற்றச்சாட்டுக்களை முன் வைக்கவோ விஜய் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. சுருக்கமாக மக்களுக்கு எல்லாம் தெரியும் என முடித்து விட்டார்.
அதேபோல மொழித் திணிப்பு குறித்து அவர் பேசியபோது இந்தி என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. அதாவது இந்தித் திணிப்பு என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. மாறாக எந்த மொழியையும் திணிக்காதீங்க என்று மட்டுமே சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிரத்யேகமாக ஏதாவது காரணம் இருக்கிறதா என்று தெரியவில்லை.