முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுங்க.. ஆர்ம்ஸ்டிராங் கொலைக்கு நடிகர் விஜய் கண்டனம்

Su.tha Arivalagan
Jul 06, 2024,05:34 PM IST

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராங் படுகொலைக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டின் முக்கியமான தலித் தலைவர்களில் ஒருவரான பகுஜன் சமாஜ் தலைவர்  ஆம்ஸ்டிராங் நேற்று இரவு தனது வீட்டின் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்ததாக 8 பேர் கொண்ட கும்பல் போலீஸில் சரணடைந்துள்ளது. அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஆர்ம்ஸ்டிராங் கொலைக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய்யும் இந்தக் கொலைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.




இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.


ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.