நீட் மாநில உரிமைகளுக்கு எதிரானது.. தேவையில்லை.. மக்கள் கருத்தை மதிக்க வேண்டும்.. விஜய்

Manjula Devi
Jul 03, 2024,05:42 PM IST

சென்னை:   நீட் தேர்வு என்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது. இது தேவையில்லை என்று மக்கள் கருதுகிறார்கள். உடனடியாக கல்வி மற்றும் சுகாதாரத்தை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் கூறியுள்ளார்.


தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று 2வது கட்ட கல்வி உதவி விழா சென்னையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு விஜய் பேசினார். அப்போது நீட் குறித்து முக்கியமாக அவர் பேசினார். கடந்த முறை நீட் குறித்து அவர் கூறவில்லை என்று பலர் குறை கூறியிருந்தனர். இதை மனதில் வைத்து இன்று நீட் குறித்து அழுத்தம் திருத்தமாக தனது கருத்தை வெளியிட்டார் விஜய். நீட் தேவையில்லை, நான் நீட்டுக்கு ஆதரவாக இல்லை என்பதை இன்று தெள்ளத் தெளிவாக உணர்த்தி விட்டார் விஜய். விஜய் பேச்சின்போது நீட் குறித்துக் கூறியதாவது:


நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது:




இன்னிக்கு நான் முக்கியமாக பேச நினைத்தது நீட் தான். நீட்டால் மாணவ மாணவியர் பாதிக்கப்படுகிறார்கள். மாநில உரிமைகளுக்கு எதிரானது.  மாநிலப் பட்டியலில்தான் கல்வி இருந்தது. பின்னர் பொதுப் பட்டியலுக்கு சேர்த்து விட்டனர். இதுதான் முதல் பிரச்சினை. ஒரே நாடு ஒரே பாடத் திட்டம் ஒரே தேர்வு என்பதே முதலில் அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்திற்கு எதிரானது. மாநிலத்துக்கு ஏற்றார் போல பாடத் திட்டம் இருக்க வேண்டும். பல்வேறு கோணங்கள் இதில் உள்ளன. அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். 


பன்முகத்தன்மை பலமே தவிர பலவீனம் அல்ல. மாநில மொழியில் படித்து விட்டு, மாநிலப் பாடத் திட்டத்தில் படித்து விட்டு என்சிஇஆர் திட்டத்தில் தேர்வு எழுதச் சொன்னால் எப்படி. கிராமப்புற மாணவ மாணவியருக்கு இது கடினமானது. 3வது பிரச்சினை கடந்த மாதம் நடந்த நீட் தேர்வில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. இது தேர்வின் மீதான நம்பகத்தன்மை போய் விட்டது. நாடு முழுக்க தேவையில்லை என்பதே நாம் புரிஞ்சுக்க வேண்டும். 


தமிழக அரசின் தீர்மானத்தை வரவேற்கிறேன்:




நீட் விலக்குதான் உடனடி தீர்வு, நீட் தேர்வு ரத்து கோரி தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் போட்டுள்ளது. அதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஒன்றிய அரசு கால தாதமம் செய்யாமல் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சரி செய்ய வேண்டும். நிரந்தரத் தீர்வு என்ன என்றால் கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். இதில் பிரச்சினை வரும் என்று உணர்ந்தால், இடைக்காலத் தீர்வாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, சிறப்புப் பொதுப் பட்டியலை உருவாக்கி, கல்வி, சுகாதாரத்தை அதில் சேர்க்க வேண்டும். 


இப்போது உள்ள பொதுப் பட்டியலில் உள்ள பல விஷயங்களில், மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. முழு சுதந்திரத்தை தர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். 


ஒன்றிய அரசு நடத்தும் எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிஐ நிறுவனங்களுக்கு வேண்டுமானால் நீட  நடத்திக்கணும்னா நடத்திக்கங்க.  உடனே நடக்குமான்னு தெரியலை, நடக்கவும் விட மாட்டாங்க. இதைப் பகிர விரும்பினேன். 


கல்வி என்பது கொண்டாட்டம். ஜாலியா படிங்க. ஸ்டிரஸ் வேண்டாம். உலகம் பெருசுங்க. வாய்ப்புகள் நிறைய கொட்டிக் கிடக்கு.  ஏதாவது மிஸ் ஆனால் பீல் பண்ணாதீங்க. இப்போது கிடைத்ததை விட பெரிய ஆப்பர்சூனிட்டி இருக்குன்னு அர்த்தம். தேடிக் கண்டுபிடிங்க. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என்றார் விஜய்.