புதுச்சேரி கொடூரம்: "ஈவு இரக்கமின்றி.. அவர்களை கடுமையாக தண்டிங்க".. நடிகர் விஜய் ஆவேசம்

Su.tha Arivalagan
Mar 06, 2024,07:30 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமியை கொடூரமாக துன்புறுத்தி படுகொலை செய்த நபர்களுக்கு ஈவு இரக்கமின்றி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.


புதுச்சேரியில், 9 வயது சிறுமி குரூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சம்பவத்தால் புதுச்சேரியே கொந்தளித்துப் போயுள்ளது. புதுச்சேரி முழுவதும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.


இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:




புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. 


பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். 


சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்.