தவெக நிர்வாகிகளுக்கு நாளை அரசியல் பயிலரங்கம்.. புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு

Meenakshi
Oct 17, 2024,05:15 PM IST

சென்னை: சேலத்தில் தவெக நிர்வாகிகளுக்கு நாளை அரசியல் பயிலரங்கம் நடைபெறும் என்று தவெக கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


நடிகர் விஜய்யின் தவெக கட்சி மாநாடு வருகிற 27ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. காவல்துறையினர் வழங்கிய 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று காவல்துறை சார்பில் தவெக கட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டு அரசியல் பயிலரங்கள் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கானக் குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நம் கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்படி, நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா குறித்து, மாநாட்டுக் குழுக்கள் மற்றும் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அரசியல் பயிலரங்கம் மற்றும் மாநாட்டுப் பணிகளுக்கானக் குழுக்களின் நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வு, சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மாளிகையில், 18.10.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.


இப்பயிலரங்கில் அரசியல் திறனாய்வாளர்கள் கலந்துகொண்டு கீழ்க்கண்ட தலைப்புகளில் கருத்துக்களை வழங்க உள்ளனர்.


பொருள்:


1. இதுவரை தமிழகத்தில் நடந்த மாநாடுகள் குறித்த பார்வை 

2. கொள்கைகள் மற்றும் கருத்தியலை அணுகும் முறை 

3. சமூகப் பொறுப்புணர்வு, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் மாநாட்டைச் சிறப்பிப்பது 

4. வெற்றிக் கொள்கை திருவிழா - விளக்க உரை 

5. மாநாட்டுக் குழுக்களுக்கான கலந்தாய்வு 


எனவே, இக்கலந்தாய்வில் அனைத்துக் குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழக, புதுச்சேரி மாநிலங்களின் தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்