ஜூன் 22 விஜய் பிறந்தநாள்.. தவெக சார்பாக.. பிரமாண்ட பொதுக்கூட்டம்?.. புஸ்ஸி ஆனந்த் சூசகம்!

Manjula Devi
May 28, 2024,05:37 PM IST
சென்னை: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று அன்னதானத் திட்டத்தை தொடங்கி வைத்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரும் ஜூன் 22ஆம் தேதி பல்வேறு நலத்திட்டங்களை செய்ய இருப்பதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருவதுடன், அவ்வப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவராகவும் இருந்து தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டும் வருகிறார். மேலும் தற்போது நடித்து வரும் கோட் படத்துடன், அடுத்து நடிக்க இருக்கும் விஜய் 69 ஆவது படத்திற்கான முன்னேற்பாடு வேலைகளையும் செய்து வருகிறார். 

விரைவில் இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு, வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத்  தேர்தல் முதல் முழுமையாக தன்னை அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுத்த உள்ளார் நடிகர் விஜய். இந்த தருணத்திற்காக ரசிகர்கள், பொதுமக்கள், விஜய் ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.



இந்த நிலையில் இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம் வழங்க தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

எல்லாரும் பிறந்தநாள் வந்தால் வருடத்தில் ஐந்து நாள்.. பத்து நாட்கள்.. கொண்டாடுவார்கள். ஆனால் எங்க தலைவரோட பிறந்தநாளை 365 நாட்களும் கட்சி நிர்வாகிகள் கொண்டாடுகிறார்கள் என்றால் தமிழக வெற்றிக் கழகம் தான் என்பதை நான் இந்த நேரத்தில் கூறுகிறேன். வரும் ஜூன் 22ஆம் தேதி( விஜய்யின் பிறந்தநாள்) எல்லோருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய இருக்கிறோம். 

கட்சியின் முதல் பொதுக்கூட்டம் எப்போது நடைபெறும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, கட்சி சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வாக இருந்தாலும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தான் அறிவிப்பார். நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்க போகிறீர்களா என்ற கேள்விக்கு, எதுவாக இருந்தாலும் தலைவர் தான் முடிவு எடுப்பார். எல்லோரிடமும் ஆலோசித்து தலைவர் தான் முக்கிய முடிவுகளை அறிவிப்பார் எனக் கூறினார் புஸ்ஸி ஆனந்த்.