குவைத் தீ விபத்து.. இந்தியர்களின் மரணம் வேதனை தருவதாக.. த.வெ.க.தலைவர் விஜய் இரங்கல்

Meenakshi
Jun 13, 2024,06:08 PM IST

சென்னை: குவைத் தீ விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.


குவைத்தில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் 200 தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்று காலை இங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பதில் குழப்பம் நிலவுகிறது. உயிர் இழந்தவர்களில் 19 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கேரளா அமைச்சரவை தெரிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் 5 பேர் உயிரிழந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தவெக தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் எற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.


உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.