நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் மக்களை சந்திப்பார் விஜய்.. வதந்திகளை நம்பாதீங்க.. த.வெ.க!

Su.tha Arivalagan
Feb 23, 2024,06:45 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் மக்களை சந்திப்பார் விஜய். இதை அவரே தெளிவாக அறிவித்து விட்டார். எனவே கட்சி தொடர்பாக வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில் கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்திய பின்னர் மதுரையில் மாநாடு நடத்த விஜய் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை வைத்து அனைத்து ஊடகங்களும் செய்தியும் வெளியிட்டு வந்தன.


இந்தத செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தற்போது ஒரு அறிக்கையை புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் இடம் பெற்றுள்ள தகவல்:




நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர்  விஜய்  அவர்கள், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார்.


தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும், உறுப்பினர்கள் சேர்க்கைக்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் கடந்த 19ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளேன்.


கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில்  வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் இப்போதைக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் மாநாடு நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிய வருகிறது.