கட்சிகளின் கொடி விவகாரத்தில்... தலையிட மாட்டோம்.. தவெக கொடி குறித்து தேர்தல் ஆணையம் பதில்

Meenakshi
Sep 30, 2024,04:40 PM IST

சென்னை:   தவெக கட்சி கொடி குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்ததற்கு தேர்தல் ஆணையம் பளிச் பதில் அளித்துள்ளது.


தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்த விஜய், கடந்த மாதம் 22ம் தேதி கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார். நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளையும் கட்சித் தலைவர் விஜய் விறுவிறுப்பாக செய்து வருகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தவெக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.கட்சி நிர்வாகிகளுக்கும் தவெக பொதுச்செயலாளர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று கட்சி நிர்வாகிகளை பார்த்து அழைப்பிதழை வழங்கி வருகிறார். 




கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்ட அன்றே கொடி குறித்த எதிர்ப்புகள் கிளம்பி விட்டன. விஜய்யின் கட்சிக் கொடியில் இடம் பெற்று இருந்த யானை சின்னம், தங்கள் கட்சியின் சின்னம் என பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. யானை சின்னத்தை நீக்காவிட்டால் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்போவதாக கூறியிருந்த பகுஜன் சமாஜ் கட்சி இது தொடர்பாக புகாரும் தேர்தல் ஆணையத்திடம் அளித்தது.


இந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இதுதொடர்பாக அது கொடுத்துள்ள விளக்கத்தில், தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது. அரசியல் கட்சிக்கொடியில் இடம் பெறும் சின்னங்களுக்கு நாங்கள் ஒப்புதலோ, அங்கிகாரமோ வழங்குவது இல்லை. கொடிகளை உருவாக்கும் கட்சிகளே, பிற கட்சிகளின் சின்னம் உள்ளிட்டவை தங்களது கொடியில் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்