முழக்கப் பாடலுடன் தொடங்கியது தவெக மாநாடு.. ஸ்தம்பித்த வி. சாலை.. ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள்!

Manjula Devi
Oct 27, 2024,03:05 PM IST

விழுப்புரம்: தொண்டர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியதால்  நான்கு மணிக்கு தொடங்க உள்ள மாநாடு 3:00 மணிக்கு  தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாநாட்டு மேடைக்கு தவெக தலைவர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் வர இருக்கிறார். ஆர்ப்பரிக்கும் தொண்டர்களை இப்போது முழக்கப் பாடல் மேலும் உற்சாகப்படுத்தி வருகிறது.


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி அருகே வி.சாலை பகுதியில் நடைபெறுவதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு தொண்டர்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் உள்ளனர். இப்போதே மனித தலைகளாக மாநாடு முழுவதும் நிரம்பிவிட்டன. மேலும் வருபவர்களுக்கு மாநாட்டு திடலில் இடம் பற்றாது. இதனைத் தொடர்ந்து இனி மாநாட்டிற்கு வருவோர்கள் மாநாட்டை பார்க்கும் வகையில் திடலை சுற்றி 700 led திரைகள் பொருத்தப்பட்டு அவர்கள் வெளியே நின்று பார்க்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



கட்டுக்கடங்காத தொண்டுகளின் கூட்டம் அலைமோதுவதால் காவல்துறையினரும் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர். விழுப்புரம் பகுதிகளில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தவெக தொண்டர்கள் 10 கிலோமீட்டர் வரை நடந்தே மாநாட்டுக்கு செல்கின்றனர்.


முதலில் மாநாடு 4 மணிக்கு  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கும் காரணத்தால் 3 மணிக்கே மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டு தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு  தற்போது தொடங்கியுள்ளது. முழக்கப் பாடலுடன் மாநாடு தொடங்கியுள்ளது. இது முடிவடையும்போது விஜய் மாநாட்டு மேடைக்கு வர இருக்கிறார். இதற்காக அலைகடலென திரண்ட தொண்டர்கள் விஜயை காண எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்