Tvk மாநாடு 2024: தோழர்களே டூவீலர் வேண்டாம்.. உங்க நல்லதுக்கு சொல்றேன்.. விஜய் கோரிக்கை

Manjula Devi
Oct 26, 2024,11:25 AM IST

விழுப்புரம்: தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு உலகமே திரும்பிப் பார்க்க ஆவலாக உள்ள தருணத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில், மீண்டும் மீண்டும் சொல்கிறேன். எல்லா வகையிலும் எனக்கு உங்கள் பாதுகாப்பு தான் முக்கியம். மாநாட்டில் நீங்கள் அனைவரும் மிக பாதுகாப்புடன் இருக்க வேண்டும். டூவீலரில் வருவதைத் தவிருங்கள் என்று தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.


தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள விசாலை கிராமத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், மின்னொளியால் மாநாடு திடல் ஜொலிக்கின்றது. 




85 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருவாகியுள்ள இந்த திடலில் பச்சைக் கம்பளம் விரிக்கப்பட்டு அதில் 50,000 பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகளும், மிக பிரம்மாண்ட பார்க்கின் வசதி, மின்விளக்குகள், 35 அடியில் கொடிக்கம்பம், என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. விடிஞ்சா கல்யாணம் என்ற உற்சாக மன நிலையில் விஜய் கட்சியினர் ஆர்வத்தோடு விக்கிரவாண்டியை நோக்கி கிளம்ப தயாராகி வருகின்றனர்.


இந்த மாநாட்டில் திரளான ரசிகர்கள், தொண்டர்கள், விஜய் ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகள், என லட்சக்கணக்கான கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பத்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.இதற்காக திடலை சுற்றி 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாநாட்டில் எவ்வித அசம்பாதமும் ஏற்படக் கூடாது என்ற நோக்கில் விஜய் கவனமாக செயல்பட்டு வருகிறார். இதற்காக பல்வேறு அறிவுறுத்தல்களையும், கோட்பாடுகளையும் நிலை நிறுத்தியும் வருகிறார்.இதனை தொண்டர்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியும் உள்ளார். அதற்காக மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி பத்திரமாக வாருங்கள் என பதிவு செய்து கொண்டே வருகிறார்.


இந்த நிலையில்  பொது மக்களின் பாதுகாப்பே முக்கியம் என தவெக தலைவர் விஜய் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,


என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம்.


பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். 


காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம். ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். 


இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, 

மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.


உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும். 


நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.


தோழமையுடன், உங்கள் விஜய் என பதிவிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்