TVK Party Flag.. கொண்டாடத் தயாராகும் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள்.. கம்பங்கள் ரெடி!

Meenakshi
Jul 19, 2024,05:33 PM IST

புதுச்சேரி:  தமிழக வெற்றிக் கழகத்தின்  கட்சிக் கொடி இன்னும் ஒரே வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ள நிலையில் அதைக் கொண்டாடவும், சாதனை அளவிலான கொடிக் கம்பங்களை நிறுவி சாதனை படைக்கவும் கட்சித் தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் தயாராகி வருகின்றனர்.


தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது பிறந்த நாளை நேற்று புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடினார். அவருக்கு தவெக தலைவர் விஜய் போனில் வாழ்த்துத் தெரிவித்தார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புஸ்ஸி ஆனந்த்  வீட்டிற்கு  நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொண்டர்கள் புஸ்ஸி ஆனந்த் வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 




தமிழகத்திலிருந்து மாவட்ட வாரியாக வந்திருந்த தவெக தொண்டர்கள், புதுவை ரயில் நிலையம் அருகில் இருந்து பேண்டு வாத்தியம், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புஸ்ஸி ஆனந்த் வீட்டுக்கு படையெடுத்தனர். அங்கு அவருக்கு ஆள் உயர மாலை, பூங்கொத்து, பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து பல பகுதிகளில் இருந்து வந்திருந்த தவெக தொண்டர்களால் நகரம் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.


வாழ்த்து கூறிய தவெக தொண்டர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த் ஒரே வாரத்தில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொடி எப்படி இருக்கும், என்ன கலர் எல்லாம் அதில் இடம் பெறும்.. என்பது குறித்த பரபரப்பான பரவசத்தில் ரசிகர்கள் உள்ளனர்.


கொடி அறிவிக்கப்பட்டதும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்கள் இருக்கும் மாநிலங்களில் எல்லாம் கொடிகளை பட்டொளி வீசி பறக்க வைக்க தொண்டர்கள் தடபுடலாக தயாராகி வருகின்றனர். வேறு எந்தக் கட்சிக்கும் இல்லாத அளவுக்கு சாதனை அளவாக கொடிக் கம்பங்களை நிறுவி கொடியைப் பறக்க விடவும் ரசிகர்கள் தயார் செய்து வருகின்றனராம். மேலும் முக்கிய இடங்களில் அதிக உயரத்திலான கொடிக் கம்பங்களை நிறுவி கொடிகளைப் பறக்க விடவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனராம். இதற்குத் தேவையான அனுமதியையும் வாங்க உரிய முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.