முத்து நகரில் முத்திரை வெற்றி.. 2வது முறையாக தூத்துக்குடி எம்.பி. ஆனார் கனிமொழி கருணாநிதி!

Meenakshi
Jun 04, 2024,06:15 PM IST

தூத்துக்குடி:  மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடியில் அபார வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2019 ஆம் நடந்த மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது போலவே இந்த முறையும் மிகப் பெரிய வெற்றி அவருக்குக் கிடைத்துள்ளது.


2019 லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி 5 லட்சத்து 63 ஆயிரத்து 143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று முதல் முறையாக எம்.பி ஆனார். அந்தத் தேர்தலில் அவர் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனை வீழ்த்தியிருந்தார்.


இந்தத் தேர்தலிலும், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட  கனிமொழி இம்முறை 5 லட்சத்து 3 ஆயிரத்து 317 வாக்குகள் பெற்று அபார வெற்றியை ஈட்டியுள்ளார். கடந்த தேர்தலை விட சற்று வாக்குகள் குறைந்தாலும் கூட போன முறை போலவே இந்த முறையும் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். 




கனிமொழியின் வெற்றியை திமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் ஸ்டார் தொகுதியாக மாறி தூத்துக்குடி லோக்சபா தொகுதியில், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 6 பேரவை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. 


தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த மிகப் பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் தூத்துக்குடி மக்களை முற்றிலுமாக திமுக பக்கம் திருப்பி விட்டது. அதேபோல கடந்த ஆண்டு கடைசியில் தூத்துக்குடியில் ஏற்பட்ட மிகப் பெரிய வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பின்போது கனிமொழி அங்கேயே முகாமிட்டு வெள்ள நிவாரணப் பணிகளை பார்வையிட்டு  வந்தார் என்பதும் நினைவிருக்கலாம்.