தூத்துக்குடியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

Meenakshi
Dec 19, 2023,04:47 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என நேரில் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ வ வேலு, கீதா ஜீவன் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர்.


அப்போது உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், தென் மாவட்டங்களில் பெய்த கடும் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கால்வாயின் கரையிலிருந்து வெளியேறிய தண்ணீரால் பாதிப்பு அதிகமாக உள்ளது. தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 




தூத்துக்குடி மாநகரில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு தண்ணீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளேன். அந்த கிராமத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கிடவும் அதிகாரிகள்  அலுவலர்களிடம் வலியுறுத்தினோம். 


கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் கிராம மக்கள் 200 பேர் அங்குள்ள மசூதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்மக்களை சந்தித்து அவர்கள் ஊரில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கேட்டறிந்தோம். அவர்களுக்கு எல்லா வகையிலும் அரசு உதவிகளை செய்திடும் என்று உறுதியளித்தோம். 




பேரிடர் நேரங்களில் மனிதநேயமே முன் நிற்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மசூதியில் இடமளித்த நல்லுள்ளங்களுக்கு என் அன்பும், நன்றியும் என்றார் உதயநிதி ஸ்டாலின்.