தூத்துக்குடியில்.. வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார்.. நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன்

Manjula Devi
Dec 26, 2023,06:31 PM IST

தூத்துக்குடி: அதீத கன மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவருடன் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.


தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தண்ணீர் சூழ்ந்து பெரும் சேதம் ஏற்பட்டது. மக்கள் வீடுகளையும், தங்களின் உடைமைகளையும் இழந்து தவித்தனர். இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. என்ன செய்வது என்று அறியாமல் மக்கள் இருக்கும்  வேளையில், பல்வேறு பகுதிகளில் இருந்து உதவிக்கரம் நீட்டி மக்களை துயரத்தில் இருந்து மீட்டு வந்தனர்.


இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இவருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் சென்று தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆட்சியர்கள், அரசுத்துறை அதிகாரிகளுடன் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.




தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வெள்ள பாதிப்பு புகைப்படங்களையும் பார்வையிட்டார். வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் மத்திய நிதி அமைச்சருக்கு புகைப்படங்கள் குறித்த விளக்கங்களை அளித்தார். பின்னர் தூத்துக்குடியில் அதிகம் பாதிக்கப்பட்ட கோரப்பள்ளம், குறிஞ்சி நகர் போன்ற பகுதிகளிலும் நேரில் சென்று கள ஆய்வு செய்ய உள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.