"இந்தாங்க சார் .. உண்டியல் காசு.. இதை எடுத்துக்கங்க".. உருக வைத்த பள்ளிப் பிள்ளைகள்!

Su.tha Arivalagan
Dec 22, 2023,03:31 PM IST

- மஞ்சுளா தேவி


தேவகோட்டை:  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள், தங்களது உண்டியல் காசை, வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கி உருக வைத்துள்ளனர்.


தூத்துக்குடி, நெல்லை மாவட்ட வெள்ள பாதிப்பு குறித்து தலைமை ஆசிரியர் எடுத்துரைத்தபோது உண்டியல் சேமிப்பு பணத்தைத் தருவதாக கூறி இந்த மாணவர்கள் அசரடித்துள்ளனர்.


தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, போன்ற மாவட்டங்களில் அதீத கன மழை கொட்டி தீர்த்தது. இப்பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் மின்சாரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் அவதிக்குள்ளாகினர். 




வரலாறு காணாத மழை வெள்ளத்தால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்பை சந்தித்தது.  இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. நிவாரணம் வழங்க கூட முடியாமல் மீட்பு பணியினர் திண்டாடினர். பின்னர் விமானப்படை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினர். 


பல்வேறு தரப்பிலிருந்து மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர் .உதவி செய்யும் மனம் இருந்தாலே அவர்கள் மிக உயர்ந்தவர். ஆனால் மக்கள் துன்பப்படும் வேளையில் தங்களால் முடிந்த நிவாரண பொருட்களின் வழங்கி பல்வேறு தெய்வங்கள் உருவாகி மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர் .பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர்.


தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியிலும் நிவாரண உதவி பெறப்பட்டது. இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் வெள்ள பாதிப்பு குறித்து மாணவர்களிடம் உரை நிகழ்த்தினார். அதைக் கேட்ட மாணவ, மாணவிகள் தங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை நிவாரணத் தொகையாக அளித்தனர்‌.




மாணவர்களிடம் 10, 20 என உண்டியல் சேமித்த பணமாக மொத்தம் 500 ரூபாயை மாணவர்கள் கொடுத்தனர். இது தவிர ஆசிரியர்களும் நிதியுதவி அளித்தனர். மொத்தமா இணைந்து 15 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வாங்கி தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமாரிடம் அளித்தனர். மாணவர்கள் சாதி, மதம், உயர்வு, தாழ்வு என்ற வித்தியாசம் இல்லாமல் மனம் உவந்து உதவி செய்ததை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரன் வாழ்த்தி பேசினார்.


பிஞ்சு மனங்களுக்கே உதவி செய்யும் மனம் இருந்தால் நம்மைப் போன்றவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். மக்கள் காணிக்கையாக கோயில்  உண்டியல்களில் சென்று பணத்தை செலுத்தாமல் ஒருவேளை உணவு கூட இல்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உதவுங்கள் அதுவே கோயில் உண்டியலில் பணம் செலுத்துவதற்கு சமம்.


இதற்கு முன்பு சென்னை வெள்ள நிவாரணத்திற்கு 8000 ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருள்களும்,கேரள வெள்ள நிவாரணத்திற்கு 8000 ரூபாயும் ,பேரனின் நோய் காக்க கஷ்டப்பட்ட ஒரு பாட்டிக்கு  பள்ளி மாணவர்களின் உதவியாக 6000 ரூபாயும் அனுப்பப்பட்டு சமுதாய உதவி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் வகையில் 11 அரிசி மூடைகளை அனுப்பியது  இப்பள்ளி மாணவர்களால் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.