"திக்.. திக்"..  ஒருத்தரையும் விடாதீங்க.. உடனே மாத்துங்க.. வேகம் காட்டிய தூத்துக்குடி கலெக்டர்!

Su.tha Arivalagan
Dec 18, 2023,04:07 PM IST

- மஞ்சுளா தேவி


நெல்லை: ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள கரையோர மக்களை உடனடியாக வெளியேற்றுங்கள்.. ஒரு நிமிடம் கூட தாமதிக்காதீர்கள்.. யாராவது வர மறுத்தால் கட்டாயப்படுத்தி வெளியேற்றுங்கள் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கிராம நிர்வாக அலுவலர்களுடன் பேசிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கும் அதீத கன மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நிலைமை ரொம்ப மோசமாக உள்ளதாகவும், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள கரையோர மக்களை வெளியேற்றுமாறு தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி பேசியுள்ளார். 


இதுதொடர்பாக வெளியாகியுள்ள ஆடியோவில் இடம் பெற்றிருப்பதாவது:




ஸ்ரீவைகுண்டம் தாலுகா, தாமிரபரணி ஆற்றங்கரையோரம் 15 கிராமங்கள் உள்ளது. வேறு வழியே இல்லை. அனைவரையும் வெளியேற்றுங்கள் . இதுவரை 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இன்னும் ஒரு லட்சத்துக்கு மேல் வெளிவரப் போகிறது. யார் வராங்க ..வரல ..என யாரையும் கேட்காதீர்கள்.


நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எல்லோரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றுங்கள். எல்லோரையும் வீட்டை பூட்டிவிட்டு வெளியேற்றுங்கள். என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதை பிறகு பார்ப்போம். முதலில் உயிரை காப்பாற்றுவது தான் நமது வேலை.  இதுக்கு மேல நிலைமையை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. உடனடியாக செய்யுங்கள். 


பஞ்சாயத்து தலைவர்கள் எல்லோரிடமும் பேசுங்க. அதிகபட்சமாக நாலு மணி நேரம் தான் இருக்கிறது. இன்னும் ஒரு லட்சத்துக்கு அதிகமான தண்ணீர் ஊருக்கு வரப்போகுதுன்னு மக்களிடம் சொல்லுங்க. மழையினால் தண்ணீர் வரவில்லை. அணைகளின் மூலம் தண்ணீர் வரப்போகிறது என்பதை தெளிவாக சொல்லுங்க. வலுக்கட்டாயமாக ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அனைவரையும் வெளியேற்றுங்கள். நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என பேசியுள்ளார் கலெக்டர்.


உண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நிலைமை மோசமாகத்தான் உள்ளது. மொத்த ஊரும் தண்ணீரில் மூழ்கியிருப்பதைப் போல காணப்படுகிறது. சென்னையில் வந்த வெள்ளத்தையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு மிக மோசமான பாதிப்பை இந்த வெள்ளம் ஏற்படுத்தியுள்ளது என்று களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டு வர பல நாட்களாகும் என்று அங்கிருப்போர் கவலை தெரிவிக்கின்றனர்.