சிறுமி படுகொலைக்கு காரணமான.. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குக..  தினகரன் ஆவேசம்!

Manjula Devi
Mar 06, 2024,04:34 PM IST

சென்னை: புதுச்சேரி சிறுமி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


புதுச்சேரி முத்தியால்பேட்டை அருகே உள்ள சோலை நகரில் 9 வயது சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டி சாக்கடையில் வீசி உள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். 


அப்பகுதியை சேர்ந்த கருணாஸ் என்ற இளைஞன் (19) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த விவேகானந்தன் (59) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.




பொதுமக்கள் கோபத்தால் கொந்தளித்து சிறுமி கொலை வழக்கில் நீதி கேட்டு இளைஞர்கள், பெண்கள், சமூக  ஆர்வலர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு புதுச்சேரி கடற்கரை மற்றும் முந்தியால் பேட்டை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தவிர புதுச்சேரி கடற்கரை அருகே சாலை காந்தி சிலை முன்பு கருப்பு சட்டை அணிந்து சிறுமியை கொலை செய்தவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என  வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் புதுச்சேரி சிறுமி படுகொலை குறித்து டிடிவி தினகரன் கூறுகையில், புதுச்சேரி சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய நிகழ்வு தொடராமல் இருக்க போதைப்பொருள் நடமாட்டத்தை புதுச்சேரி அரசு கட்டுப்படுத்த வேண்டும். சிறுமியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.