லாட்டரி சீட்டு போலதான் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் பதவி கிடைத்தது: டிடிவி தினகரன் பேட்டி!

Meenakshi
Mar 03, 2025,06:52 PM IST

தேனி: அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தில் அவருக்கு குருட்டு அதிர்ஷ்டத்திலும், லாட்டரி சீட்டு யோகம் போலவும் தான் அவருக்கு முதல்வர் பதவி கிடைத்தது. அதை பயன்படுத்தி அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கையில் வைத்துள்ளார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார்.


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமமுக சார்பில் சட்டமன்ற தொகுதி அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி புரட்சிதலைவர் மற்றும் அம்மா அவர்களை முதல்வர்களாக்கிய தொகுதி. தேனி மாவட்டத்திலலேயே அதிமுக மூழ்காத கப்பல் என்று கூறும் பழனிச்சாமி மறைமுகமாக திமுகவுக்கு ஆதரவளித்து தனது சுய லாபத்திற்காக, சொந்த நலனுக்காக அதிமுகவை பலவீனப்படுத்தி வருகிறார். 


தமிழக அரசியல் வரலாற்றில், வருங்காலத்தில் துரோகம் என்ற சொல்லுக்கு உவமையாக இருக்கக்கூடிய பெயர் எடப்பாடி பழனிசாமிக்கு தான். அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தில் அவருக்கு குருட்டு அதிர்ஷ்டத்திலும், லாட்டரி சீட்டு யோகம் போலவும் தான் அவருக்கு முதல்வர் பதவி கிடைத்தது. அதை பயன்படுத்தி அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கையில் வைத்துள்ளார்.




பழனிச்சாமிக்கு காவடிதூக்குபவர்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவிற்கு பழனிச்சாமி மூடுவிழா நடத்தி விடவார். பழனிச்சாமி யார் வேண்டுமானாலும் பொதுச் செயலாளர் ஆகலாம் என்று கூறுவது நயவஞ்சகமானது. பொதுச்செயலாளர் ஆவதற்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு வேண்டும். அம்மாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் திரண்டால் தான் தீயசக்தி திமுகவை வீழ்த்த முடியும். அம்மாவின் ஆட்சியை கொண்டுவர முடியும். இதைத் தொண்டர்கள் உணரத் தொடங்கிவிட்டனர். அடுத்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவோடு அம்மாவின் ஆட்சி அமையும் என்று நினைக்கின்றேன். மும்மொழிக் கொள்கை அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் எங்கள் கட்சி சார்பாக பிரதிநிதி கலந்து கொள்வார்கள். அந்த விவகாரத்தை தவிர்த்து வேறு ஏதாவது பேசினால் வெளிநடப்பு செய்வோம் என்று தெரிவித்தார்.