பெண் பயணியின் கையைப் பிடித்து இழுத்த டிடிஆர்.. உடனடி கைது!

Su.tha Arivalagan
May 10, 2023,12:25 PM IST
கோட்டயம்: கேரளாவில் ஒடும் ரயிலில் பெண் பயணியின் கையைப் பிடித்து இழுத்து அநாகரீகமாக நடந்து கொண் டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

நிலம்பூர் - கொச்சுவேலி இடையிலான ரயிலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  செவ்வாய்க்கிழமை காலை நிலம்பூர் -கொச்சுவேலி இடையிலான ராஜ்ஜிய ராணி ரயில் அலுவா ரயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பெண் பயணிக்கு ஆர்ஏசியில் இடம் கிடைத்திருந்தது. அவரும் எஸ் 4 பெட்டியில் அதற்கான இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அப்போது அவரது இருக்கைக்கு அருகே காலியாக இருந்த இருக்கையில் அந்த ரயிலின் டிக்கெட் பரிசோதகர் வந்து அமர்ந்துள்ளார். மேலும் அப்பெண்ணின் கையையும் இறுகப் பற்றியுள்ளார். இதைப் பார்த்த அந்தப் பெண் பதறிப் போய் கையை உதறியுள்ளார். ஆனால் டிடிஆர் விடவில்லை. மீண்டும் கையைப் பிடித்துள்ளார்.



இதையடுத்து தனது செல்போன் மூலம் அந்தப் பெண் திருவனந்தபுரத்தில் உள்ள ரயில்வே கட்டுப்பாட்டு  அறைக்கு போன் செய்தார். அவர்கள் ரயிலில் இருந்த ஆர்பிஎப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு விரைந்து வந்தனர்.

சம்பந்தப்பட்ட டிடிஆரிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது.  இதையடுத்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் டிடிஆர் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஐர்படுத்தி 14 நாள் சிறைக் காவலில் அவர் அடைக்கப்பட்டார்.