திரிஷா விவகாரம்.. "விசாரணைக்கு வாங்க".. மன்சூர் அலிகானுக்கு போலீஸ் சம்மன்!

Su.tha Arivalagan
Nov 22, 2023,05:10 PM IST

சென்னை: நடிகை திரிஷா குறித்துப் பேசிய விவகாரம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு போலீஸ் சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.


லியோ படத்தில் தன்னுடன் நடித்த நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. திரிஷா மட்டுமல்லாமல் இதற்கு முன்பு தன்னோடு நடித்த ரோஜா, குஷ்பு ஆகியோர் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார் மன்சூர் அலிகான்.


இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து அவருக்கு திரிஷா உள்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தேசிய மகளிர் ஆணையமும் இதில் தலையிட்டது. மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில டிஜிபிக்கு அது கோரிக்கை விடுத்திருந்தது.




இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 ஏ, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.


இந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக மன்சூர் அலிகானை விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்காக நாளை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு மன்சூர் அலிகானுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான சம்மனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீஸார் இன்று மன்சூர் அலிகானின் வீட்டுக்கு வந்து கொடுத்தனர்.


அப்போது மன்சூர் அலிகான் வீட்டில் இல்லாததால், அவரது மனைவி சம்மனை பெற்றுக் கொண்டார். நாளை மன்சூர் அலிகான் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராவாரா என்று தெரியவில்லை.