அக்கா வணக்கம்.. எல். முருகன் காலத்தில்தான் அவர்கள் சேர்க்கப்பட்டார்கள்.. திருச்சி சூர்யா!

Su.tha Arivalagan
Jun 09, 2024,12:57 PM IST

சென்னை:  தமிழ்நாடு பாஜகவில் சமூக விரோதிகள் சேர்க்கப்பட்டது, டாக்டர் தமிழிசை செளந்தரராஜனால், மாநில பாஜக தலைவராக்க பரிந்துரைக்கப்பட்ட எல் முருகன் காலத்தில்தான் என்று திருச்சி சூர்யா கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


முன்னாள் ஆளுநரும், தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் அளித்துள்ள ஒரு பேட்டி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, விவாதங்களை எழுப்பியுள்ளது. அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்து நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு என்ன வருத்தம் என்றால், கட்சியில் சமூகத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலர் கட்சியில் பதவியில் உள்ளனர். இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். நான் தலைவராக இருந்திருந்தால் நான் தவிர்த்திருப்பேன். நான் அதுபோன்றவர்களை என்கரேஜ் செய்ய மாட்டேன் என்று கூறியிருந்தார். அவர் பாஜகவில்  சமூக விரோதிகள் குறிப்பாக ரவுடிகள் அதிக அளவில் சேர்க்கப்பட்டதால்தான் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டிருப்பதாக தமிழிசை மறைமுகமாக கூறியிருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




இந்த கருத்துக்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டாக்டர் தமிழிசை பேட்டி குறித்து அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான திருச்சி சூர்யா கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:


தமிழிசை அக்கா வணக்கம். தேசியத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற பாடம் எடுக்கக்கூடிய தாங்கள் ஒரு முன்னாள் மாநிலத் தலைவர் பொது ஊடகங்களில் இப்படி கருத்து பதிவிடுவது சரியா?


குற்ற பின்னணி உள்ளவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்கப்பட்டது என்பது தங்களுடைய பரிந்துரையில் மாநிலத் தலைவர் ஆக்கப்பட்ட எல்.முருகன் காலகட்டத்தில்தான் வேண்டுமென்றால் நான் பட்டியல் தருகிறேன். கட்சியின் வளர்ச்சியையும் தனி நபருக்கு கிடைக்கும் புகழையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி புலம்புகிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. தாங்கள் மாநில தலைவராக இருந்தபோது கட்சியில் சேர்வதற்கு கூட ஆட்கள் முன்வரவில்லை என்பதே நிதர்சனம்.


அதிமுக கூட்டணி இருந்திருந்தால் அதிகம் இடங்கள் ஜெயித்திருக்கும் என்று தேசியத்தின் முடிவுக்கு எதிரான உங்கள் கருத்து கட்சி கட்டுப்பாடா? பாஜகவுக்குள் தேர்தல் நிதிகள் சரியாக போய் சேரவில்லை என்ற பொதுத்தளத்தில் நீங்கள் பேசிய பிறகுதான் இன்று தமிழ்நாடு முழுவதும் அது பேசும் பொருளாக ஆகியது இது கட்சி கட்டுப்பாடா?


இப்படி எல்லாம் கட்டுப்படாத முன்னால் மாநிலத் தலைவரின் கருத்திற்கு அமைதி காக்கும் தேசியம் அதற்கு எதிர் வினையாற்றும் எங்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதை சந்திக்க தயாராக உள்ளோம். பதவிக்காக நாங்கள் இந்த கட்சியில் இல்லை அண்ணனின் அன்புக்காக மட்டுமே உள்ளோம் என்று கூறியுள்ளார் திருச்சி சூர்யா.