சாதி லாபிகளுக்கு அடி பணிந்து விட்டதே பாஜக.. 3 பேரைக் குறி வைத்து.. திருச்சி சூர்யா சிவா தாக்கு!

Su.tha Arivalagan
Jun 23, 2024,01:41 PM IST

சென்னை: பாஜகவில் வந்து சேர்ந்த வேகத்திலேயே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, கட்சியிலிருந்து இடையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் சேர்ந்து, இப்போது கட்சியை விட்டு மீண்டும் நீக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரின் ஜாதியை வைத்து ஒரு விமர்சனத்தை முன்வைத்துள்ளார் திருச்சி சூர்யா சிவா.


திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன்தான் திருச்சி சூர்யா சிவா. தந்தையுடன் ஏற்பட்டமோதல், திமுக மீதான அதிருப்தி காரணாக அவர் பாஜகவில் வந்து இணைந்தார். தீவிர அண்ணாமலை ஆதரவாளராக வலம் வந்த அவர் திமுகவுக்கு எதிராக தீவிரமாக களமாடி வந்தார். இந்த நிலையில் கட்சியின் மகளிர் பிரமுகரான டாக்டர் டெய்சியுடன் ஏற்பட்ட மோதலால் அவர் சர்ச்சைக்குள்ளானார்.




இதனால் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். மறுபடியும் ஆக்ரோஷமாக செயல்பட்டு வந்த அவர் தற்போது மீண்டும் பாஜகவை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு எக்ஸ் பதிவையும் போட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோரை வைத்து ஒரு விமர்சனப் பதிவைப் போட்டுள்ளார் சூர்யா சிவா.


இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவு:


பாஜக மையக் குழுவில் கட்சி தலைமையும் தலைவர்களையும் விமர்சித்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று என்னையும் கல்யாணராமன் அவர்களையும் நீக்கினீர்கள் நியாயம் ஏற்றுக் கொள்கிறேன். 


இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்து கட்சியில் ரௌடிகள் இருக்கிறார்கள் என்றும், அதிமுகவுடனான கூட்டணியை கெடுத்து வெற்றியை தடுத்து விட்டார் என்றும் மாநிலத் தலைவரின் செயல்பாட்டையும் விமர்சனம் செய்த தமிழிசை மேல் நடவடிக்கை ஏன் இல்லை? நாடார் என்பதாலா?


தமிழிசை சொன்னதை உண்மை என்று இந்திய தேசிய பாஜக தலைமை கருதி இருந்தால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு தடையாக இருந்தது எது கவுண்டர் லாபியா?


தமிழ்நாட்டில் பாஜக நாற்பது இடங்களில் தோற்றதிற்கு வீட்டு வாசலில் வெடி வெடித்து கொண்டாடிய, திமுகவின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் மேடை ஏறி உரையாற்றிய SVe.சேகர் இன்னும் பாஜக உறுப்பினராக இருக்கிறார் ஏன் அவர் மீது நடவடிக்கை இல்லை? பிராமணர் என்பதாலா? சாதி படிநிலை அடிப்படையில்தான் நடவடிக்கை பாயுமா?


எல்லோரும் இந்து என்று மேடையில் ஒப்புக்கு சொல்லிவிட்டு, சாதி லாபிகளுக்கு அடிபணிந்து  Social Engineering அப்பட்டமாக அம்பலப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார் சூர்யா சிவா.