43 இடத்தில் பெட்ரோல் குண்டு.. அதை விட்டுட்டாங்க.. இதை  பிடிங்க.. திருச்சி சூர்யா சிவா கிண்டல்!

Su.tha Arivalagan
Nov 09, 2023,01:08 PM IST

திருச்சி: தமிழ்நாட்டில் 43 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை காவல்துறையால் தடுக்க முடியவில்லை. ஆனால் அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வெடிக்க வைத்திருந்த பட்டாசுகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர் என்று திருச்சி சூர்யா சிவா கிண்டலடித்துள்ளார்.


பாஜகவைச் சேர்ந்த திருச்சி சூர்யா சிவாவுக்கும், அதே கட்சியைச் சேர்ந்த சிறுபான்மை பிரிவு நிர்வாகி டெய்சி சரணுக்கும் இடையே பல மாதங்களுக்கு முன்பு கடும் வாய்ச்சண்டை நடந்தது. தொலைபேசியில் இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர். ஆபாசமாகவும் அதில் திருச்சி சூர்யா சிவா பேசியிருந்தார். இந்த சண்டைக்குப் பின்னர் அவரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைத்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.


இந்த நிலையில் சமீபத்தில் சூர்யா சிவாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டார் அண்ணாமலை. தீவிர அண்ணாமலை பக்தரான சூர்யா சிவா மறுபடியும் தீவிரமாக களமாட ஆரம்பித்துள்ளார். நேற்று திருச்சிக்கு வந்த அண்ணாமலைக்கு மிரட்டலான வரவேற்பு கொடுத்து அசத்தினார். அண்ணாமலைக்கு  ராட்ச கிரேன் மூலமாக பெரிய சைஸ் மாலையை அணிவித்து அசத்தினார்.




இந்தப் பின்னணியில் தற்போது ஒரு ஹாட்டான டிவீட் போட்டுள்ளார் சூர்யா சிவா. அதில்,  தமிழ்நாட்டில் 43 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை தடுப்பதற்கு முடியவில்லை.  கோயம்புத்தூரில் ஐ.எஸ்.ஐ வைத்த வெடிகுண்டைத் தடுக்க முடியவில்லை.  ஆனால், அண்ணன் அண்ணாமலை அவர்கள் கலந்து கொள்ளும் ஸ்ரீரங்கம் நிகழ்ச்சியில் வரவேற்பதற்கு வைத்திருந்த தீபாவளி பட்டாசு வெடிகளை தமிழ்நாடு காவல்துறை தடுத்திருக்கிறது 


"தமிழ்நாடு போலீஸார் ஸ்காட்லாந்து போலீஸாருக்கு நிகரானவர்கள்" என்பதை நிரூபித்திருக்கிறது.  தமிழ்நாடு காவல் துறையை வெகுவாக பாராட்டுகிறேன் என்று கிண்டலாக கூறியுள்ளார். மேலும் போலீஸார் பட்டாசு பாக்கெட்டைத் தூக்கிச் செல்வது போல புகைப்படத்தையும் போட்டுள்ளார்.