வாழ்த்துகள் மாமா.. திருச்சி சூர்யா சிவா போட்ட அதிரடி டிவீட்.. பரபரக்கும் பாஜக வட்டாரம்!

Su.tha Arivalagan
Jul 30, 2024,04:56 PM IST

சென்னை:  தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படவுள்ளதாக திருச்சி சூர்யா சிவா போட்டுள்ள டிவீட் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


திமுக ராஜ்யசபா எம்பியும், சிறந்த திராவிட இயக்கப் பேச்சாளருமான திருச்சி சிவாவின் மகன்தான் சூர்யா சிவா. தந்தை திமுகவில் முன்னணித் தலைவராக இருந்த நிலையில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார். இவரை பாஜகவுக்கு அழைத்து கூட்டி வந்தவர் அண்ணாமலை என்பதால் அவர் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தார் சூர்யா சிவா.




அண்ணா அண்ணா என்று தீவிர விசுவாசியாக வலம் வந்த சூர்யா சிவா, பாஜக சிறுபான்மை பிரிவு தலைவி டெய்சியுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் லைம்லைட்டை இழந்தார். இடையில் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த சூர்யா சிவா பின்னர் மீண்டும் இணைந்தார். ஆனால் அதே வேகத்தில் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.


இப்போது அண்ணாமலைக்கு எதிராகவும், பாஜகவின் மூத்த தலைவர்கள் குறித்தும் அதிரடியாக பேட்டிகள் கொடுத்து வருகிறார். கூடவே கடுமையான குற்றச்சாட்டுகளையும் வைத்து வருகிறார். இந்த நிலையில் இன்று ஒரு டிவீட் போட்டுள்ளார் சூர்யா சிவா. நடிகர் வடிவேலுவின் தலைநகரம் பட ஜோக் வீடியோவைப் போட்டு அத்துடன் அவர் போட்டுள்ள டிவீட்டில்,  அண்ணாமலையையும்,தமிழ்நாடு பிஜேபியும் நம்பி இறந்தவர்களின் தற்போதைய நிலை. விரைவில் அறிவிப்பு:  தமிழ்நாடு பிஜேபி மாநில தலைவராக நைனார் நாகேந்திரன்  அவர்கள் நியமனம் செய்யப்பட இருக்கிறார் . வாழ்த்துக்கள் மாமா என்று கூறியுள்ளார் சூர்யா சிவா.


தமிழ்நாடு பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற பேச்சு சமீப காலமாக பலமாக அடிபடுகிறது. அண்ணாமலைக்கு எதிரான லாபியும் வலுவடைந்து வருகிறது. அதேசமயம், அண்ணாமலை மாற்றப்படக் கூடாது என்ற லாபியும் வலுவாக உள்ளது. இந்த நிலையில் சூர்யா சிவா போட்டுள்ள இந்த டிவீட் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும் யார் அடுத்த தலைவர் என்பதையும் சேர்த்து சொல்லியுள்ளார் சூர்யா சிவா.


நைனார் நாகேந்திரன் ஒரு வேளை பாஜக தலைவராக்கப்பட்டால்,  மீண்டும் பாஜகவில் இணைத்துக் கொண்டு சூர்யா சிவா செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் வலுத்துள்ளது.