திருச்சி எஸ்.பி வருண்குமாருக்கு மிரட்டல் .. சீமான் உள்ளிட்ட 22 பேர் மீது வழக்குப்பதிவு!

Meenakshi
Aug 14, 2024,05:30 PM IST

திருச்சி:   திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் 22 பேர் மீது திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் பாடியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு எஸ்பி வருண்குமார் தான் காரணம் என்றும், குறிப்பட்ட இனத்தவர்களை வருண் குமாருக்கு பிடிக்கது என்றும் குற்றம்சாட்டியிருந்தார் சீமான்.




இந்த நிலையில், வருண்குமார் மற்றும் அவரது வீட்டு பெண்களை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில், எஸ் பி வருண்குமாரும் சமூக வலைதளங்களில் பதில் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில், திருச்சி போலீஸ் நிலையத்தில் சீமான் உள்ளிட்டோர் மீது வருண் குமார் புகார் செய்திருந்தார். 


வருண் குமார் அளித்த புகாரின் பேரில், சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட 22 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய நாம் தமிழர் கட்சியை சேர்ந்து கண்ணன் மற்றும் திருப்பதியை போலீசார் நேற்று கைது செய்தனர். 


திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிபதி உத்தரவின் பேரில் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்