பாறை மேல் ஊறும் எறும்புகள்.. சீனியம்பாறை கருப்பு முனீஸ்வரன் கோவிலில்.. நாளை கிடாவெட்டு, அன்னதானம்!

Su.tha Arivalagan
Aug 12, 2024,10:28 AM IST

திருச்சி:   ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு சிறப்பு உண்டு, ஒவ்வொரு சாமிக்கும் ஒரு விசேஷம் உண்டு. அந்த வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் கீழக்குமரேசபுரத்தில் உள்ள சீனியம்பாறை கருப்பு முனீஸ்வரன் திருக்கோவிலுக்கும் ஒரு ஸ்பெஷல் உண்டு.


திருச்சியில் மிகப் பிரபலமானது பெல் நிறுவனம். அந்த நிறுவனத்தின் குடியிருப்பு வளாகத்திற்குள் ஒரு பெரிய பாறை உண்டு. அந்த பாறையில் எப்போது பார்த்தாலும் எறும்பு ஊறிக் கொண்டே இருக்கும். அந்த பாறை மீது எழுந்தருளியவர்தான் இந்த கருப்பு முனீஸ்வரர்.  எப்போதும் எறும்புகள் ஊறியபடி இருக்கும் என்பதால்தான் இவருக்கு சீனியம்பாறை கருப்பு முனீஸ்வரர் என்ற பெயரும் வந்தது. 




ஆனால் பெல் வளாகத்துத்துக்குள் கோவில் கூடாது என்று கூறப்பட்டதால் தற்போது கருப்பு முனீஸ்வரருக்கு பிரமாண்டக் கோவில் கட்ட திட்டமிட்டு விழா எடுக்கப்பட்டு வருகிறது. 7ம் தேதி தொடங்கிய விழாவின் முக்கிய அம்சமாக நாளை செவ்வாய்க்கிழமை மாபெரும் அன்னதான  விழா நடைபெறவுள்ளது. 


காலை 7 மணிக்கு அருள்மிகு முத்துமாரியமமனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அதைத் தொடர்ந்து சீனியம்பாறை கருப்பு முனீஸ்வரனுக்கு சிறப்புப் பூஜையும், தொடர்ந்து கருப்புசாமிக்கு கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. பிற்பகல் 12 மணியிலிருந்து அன்னதானம் தொடங்கும்.


கருப்பு முனீஸ்வரனுக்கு பிரமாண்டக் கோவில் எழுப்பவும் கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  முனீஸ்வரர் கிராமத்துக் கடவுள் ஆவார். தமிழ்நாட்டுக் கிராமங்களில் வணங்கப்படும் மிக முக்கியக் கிராமத்துக் கடவுளாக இருப்பவர் முனீஸ்வரர். பல்வேறு பெயர்களில் இவர் அழைக்கப்படுகிறார். கிராமத்து காவல் தெய்வமாகவும் முனீஸ்வரர் திகழ்கிறார். அந்த வகையில் இந்த சீனியம்பாறை கருப்பு முனீஸ்வரர் இப்பகுதியில் விமரிசையாக வணங்கப்படும் தெய்வமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல்: திருச்சி திவ்யா மூர்த்தி


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்