சார் பேரு.. கலைப்புலி ராஜா.. நண்பனையே போட்டுத் தள்ளியவர்.. சுட்டுப் பிடித்த திருச்சி போலீஸ்!

Manjula Devi
Jul 05, 2024,03:34 PM IST

திருச்சி:   திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே பிரபல ரவுடி கலைப்புலி ராஜாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பிரபல ரவுடி கலைப்புலி ராஜாவை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த ரவுடி தப்பிக்க முயன்று ஓடினார்.  அவரை போலீசார் பின் தொடரவே மணச்சநல்லூர் அருகே துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு  வழக்குகள் நிலுவையில் உள்ளன.




போலீசார் சுட்டதில் ரவுடி கலைப்புலி ராஜாவுக்கு காலில் குண்டுக் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த கலைப்புலி ராஜா பயங்கரமான ரவுடியாம். சமீபத்தில் இவரது நண்பரான நவீன் குமார் என்பவரை தனது ஆட்களோடு சேர்ந்து சரமாரியாக வெட்டிக் கொன்றவர். லால்குடி அருகே மதுக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி கொலையில் முடிந்தது.  


ராஜாவும், நவீன்குமாரும் நீண்ட கால நண்பர்களாம். ஆனால் சில பிரச்சினைகளால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் இருந்தது. கடைசியில் இது நவீன்குமாரின் கொலையில் போய் முடிந்தது. இந்தக் கொலை வழக்கில்தான் ராஜாவை போலீஸார் தேடி வந்தனர். ஏற்கனவே அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தப் பின்னணியில்தான் ராஜாவை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துக் கைது செய்துள்ளனர் போலீஸார்.