திருச்சி கோர்ட்டில் சீமான்.. 6 ஆடியோ ஆதாரங்களை ஒப்படைக்க டிஐஜி வருண் குமாருக்கு உத்தரவு!
திருச்சி: அவதூறு வழக்கில் 6 ஆவணங்களை சீமானிடம் ஒப்படைக்க திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார். இவர் தன்மீதும் தன்னுடைய குடும்பத்தார் மீதும் சமூக வலைதளங்களிலும் பொது வெளியிலும் அவதூறாக விமர்சனம் செய்தார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் ஆஜராகவில்லை. டிஐஜி வருண்குமார் மட்டும் ஆஜரானார்.
அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வக்கீல், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றதால், அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. நாளை சீமான் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி சீமானை இன்று ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இல்லை என்றால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்காக திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயா முன்பு சீமான் ஆஜரானார். அப்போது தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு டிஐஜி வருண்குமார் சமர்ப்பித்த ஆடியோ ஆதாரங்களை தங்களுக்கு தர வேண்டும் என்று சீமான் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
அதற்கு நீதிபதி, அரை மணி நேரத்திற்குள் சீமான் தரப்பிடம் 6 ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும். ஆதாரங்களை பெற்ற பிறகு சீமான் கையெழுத்திட்டு விட்டு செல்லவும் உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையையும் ஒத்திவைத்தார்.