பஹல்காம் தீவிரவாத தாக்குதலில்.. உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி..!
டெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி செலுத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைரசன் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 28 பேர் படுகொலை செய்யப்பட்டனர். தமிழகத்தை சேர்ந்த மூவர் உட்பட 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த கோர சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர் தாக்குதலில்
உயிரிழந்தவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் தாக்குதல் நடந்த பஹல்காம் பகுதியை பார்வையிட்ட அமித்ஷா, தாக்குதல் எவ்வாறு நடந்தது என்பது தொடர்பாக ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் 18வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ரிவென்ச் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், இன்று ஐதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இன்றைய போட்டியில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்றைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன் போட்டியில் வீரர்கள், நடுவர்கள், கருப்பு பட்டை அணிந்து பங்கேற்க உள்ளனர். போட்டி தொடங்குவதற்கு முன்பாக, ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும். இன்றைய போட்டியில் பட்டாசு பயன்படுத்தக்கூடாது சியர் லீடர்ஸ் பயன்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.