மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து.. எதற்கு தெரியுமா?

Meenakshi
Aug 26, 2024,03:57 PM IST

குன்னூர்: தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயில் சேவை வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் முக்கிய இடமாக நீலகிரி திகழ்கிறது. இந்த மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருதால், மண் சரிவு, மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட காரணங்களால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம்-உதகை இடையே கடந்த 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.



அதன்பின்னர் பாதைகள் சரி செய்யப்பட்டு கடந்த 6ம் தேதி மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டது.இதனை அடுத்து கல்லாறு ஹில் குரோவ் இடையே தண்டவாளத்தின் பராமரிப்பு பணிக்காக மீண்டும் ரயில் சேவை 25ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காலநிலை மாற்றம், தொடர் மழை, ரயில் பாதையில் மண் சரிவு, பாதைகளில் பாறைகள் உருண்டு விழுதல் உள்ளிட்ட காரணங்களால் மேட்டுப்பாளையம்-குன்னூர், குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை ரத்து தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை ரத்து வருகின்ற 31ம் தேதி வரை தொடரும் என தெற்கு ரயில்வே  தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்