கடல் ஒரே சீற்றமாக இருக்கிறது.. தனுஷ்கோடி செல்லக் கூடாது.. சுற்றுலா பயணிகளுக்கு தடை!

Meenakshi
May 23, 2024,01:20 PM IST
ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதி இல்லை என்று ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து  ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். மேலும், இங்கு வரும் பயணிகள் புகழ்மிக்க ராமநாதசாமி கோவில், அக்னி தீர்த்தம், ராமர் பாதம் உள்ளிட்ட முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்து வருகின்றனர். 



அதிலும், ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பி  பார்க்கும் இடம் தனுஷ்கோடி. இந்தியாவின் கடைசி நிலப்பரப்பாகும்.  பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புயலால் அழிந்த ஒரு நகரம் இது. பாம்பனுக்கு தென்கிழக்கே, ராமேஸ்வரத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த இடத்தில் நினைவு சின்னமும் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்ப்பதற்கு ஏராளமானோர் குவிந்தனர். அப்போது திடீர் என அப்பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பி வருகின்றனர். இந்த பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பின்னர், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.