1, 2 இல்லை.. மொத்தம் 5 ஓ. பன்னீர்செல்வம்.. திக்குமுக்காடப் போகும் ராமநாதபுரம் வாக்காளர்கள்!

Su.tha Arivalagan
Mar 28, 2024,07:18 PM IST

ராமநாதபுரம்: ராமாதபுரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 5 வேட்பாளர்கள் ஓ. பன்னீர் செல்வம் என்ற பெயரில் போட்டியிடுவதால், ராமநாதபுரம் வாக்காளர்கள் திக்குமுக்காடப் போகிறார்கள்.


தமிழ்நாட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது ராமநாதபுரம். இத்தொகுதியில்தான் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.


இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், ஓ. பன்னீர் செல்வம் என்ற பெயரில் பல வேட்பாளர்கள் இங்கு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது எடப்பாடி பழனிச்சாமியின் அல்லக்கைகளின் செயல் என்று ஓ.பி.எஸ்ஸின் மகன் ஜெய பிரதீப் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல இந்த செயல் கீழ்த்தரமானது என்று இன்னொரு மகனான தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்தும் சாடியுள்ளார்.




இந்த நிலையில் இன்று நடந்த வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. அதேபோல மேலும் நான்கு ஓ.பன்னீர் செல்வத்தின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மக்கள்தான் குழம்பிப் போகப் போகிறார்கள். சின்னத்தைப் பார்த்து தெளிவாக ஓட்டுப் போட்டால் பிரச்சினை வராது, ஆனால் பெயரைப் பார்த்து ஓட்டுப் போட்டால் குழப்பம்தான் வரும்.


ராமநாதபுரம் தொகுதியில் ஏற்கப்பட்டுள்ள ஓ.பன்னீர் செல்வம் பெயரிலான பிற வேட்பாளர்கள் விவரம்:


ஒச்சப்பன் பன்னீர் செல்வம் (உசிலம்பட்டி, மதுரை)

ஒய்யாரம் பன்னீர் செல்வம் (தெற்கு காட்டூர், ராமநாதபுரம்)

ஒச்சாத்தேவர் பன்னீர் செல்வம் (வாகைக்குளம், மதுரை)

ஒய்யாத்தேவர் பன்னீர் செல்வம்  (சோலை அழகுபுரம், மதுரை)