பயணிகள் கவனத்திற்கு.. நாளை முதல்  தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயங்கும்!

Meenakshi
Jan 29, 2024,06:09 PM IST

சென்னை:  தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் நாளை முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து முனையத்திலிருந்துதான் இயங்கும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் கூறியுள்ளார்.


சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. பார்க்க விமான நிலையம் போல சூப்பராக இருப்பதாக பயணிகள் பாராட்டி வருகின்றனர்.


கிளாம்பாக்கம் அதிநவீன பஸ் நிலையத்தை கடந்த மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இங்கு இருந்து தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இனிமேல் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.




இது குறித்து அவர் கூறுகையில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஜனவரி 24ஆம் தேதி முதல் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக நாளை முதல் அனைத்து போக்குவரத்து கழகங்களைச் சேர்ந்த செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் 210 பேருந்துகளும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். இந்த பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாளை முதல் இயக்கப்பட மாட்டாது.


ஈசிஆர் வழியாக செல்லும் பேருந்துகளும், பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர், திருப்பத்தூருக்கு செல்லும் பேருந்துகளும் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் .


பயணிகள் வசதிக்காக விழுப்புரம்  போக்குவரத்து கோட்ட பேருந்துகள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து, சென்னை நோக்கி வரும் போது தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும். மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 160 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.