தங்கத்தோடு போட்டா போட்டி.. கிடு கிடுவென உயரும் தக்காளி விலை.. அதிர்ச்சியில் மக்கள்!

Manjula Devi
Oct 08, 2024,06:37 PM IST

சென்னை:   நாடு முழுவதும்  தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து  வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து வருகின்றனர்.


ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆகிய மாநிலங்களில் தான் தக்காளி அதிகம் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது பருவமழை  மாற்றம் மற்றும் நோய் தாக்கத்தால் தக்காளியின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்து தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 


மகாராஷ்டிரா மாநிலத்தில் தக்காளி அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது நாட்டிலேயே அதிகபட்சமாக 1 கிலோ தக்காளியின் விலை ரூபாய் 160 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் தெலுங்கானா மாவட்டத்தில் கடந்த மாதம் கிலோ ரூபாய் 30க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது நூறு ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுதவிர டெல்லியில் தக்காளி விலை உயர்வு காரணமாக தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய உணவு விநியோகம் மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் சார்பில் மக்களுக்கு மானிய விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொதுமக்கள் கூடும் இடங்கள், ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற இடங்களில் மாநில அரசு மானிய விலையில் தக்காளி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது‌ குறிப்பாக தக்காளி உற்பத்தி கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. 


தமிழ்நாட்டில் கிலோ ரூ. 120


இதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் சந்தைகளில் தக்காளியின் வரத்து குறைந்து தக்காளியின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. அந்த வரிசையில்  சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 200 டன் தக்காளி வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 800 டன்னாக குறைந்துள்ளது.


இதனால் நேற்று ஒரு கிலோ தக்காளி 110க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரு கிலோ தக்காளி மேலும் உயர்ந்து  120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 90க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் விலை மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்